காபியைக் கொட்டி, துடைத்து.. நடு வானில் செர்பிய அதிபருக்கு "சொர்க்கத்தைக்" காட்டிய பைலட்!
ரோம்: நடு வானில் விமானத்தின் முக்கிய உபகரணத்தின்மீது காபியைக் கொட்டி, அதைத் துடைக்கப் போய், ஆட்டோ பைலட் ஆப் ஆகி, விமானம் குலுங்கியதால், அதில் பயணித்த செர்பிய அதிபர் மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.. எல்லாம் அந்த விமானத்தின் துணை பைலட்டால் வந்த வினைதான்.
செர்பிய அதிபர் டோமிஸ்லோவ் நிக்கோலிக், கடந்த வாரம் இத்தாலிக்கு பயணம் செய்தார். அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அவருடன் உதவியாளர்களும் பயணம் செய்தனர்.

34 வயதான பிரான்சில் வடிவமைக்கப்பட்ட பால்கன் 50 ரக விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் குலங்கியது. வேகமாக உயரம் குறைந்து இறங்கத் தொடங்கியது. இதனால் அதிபரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் நொறுங்கப் போகிறதோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
சற்று நேர போராட்டத்திற்குப் பின்னர் விமானம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதன் பிறகே போன உயிர் திரும்பி வந்தது அத்தனை பேருக்கும். இந்தக் களேபரம் காரணமாக விமானம் செர்பியத் தலைநகர் பெல்கிரேடுக்கே திரும்பி வந்தது. அங்கு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். மீண்டும் விமானம் கிளம்பவில்லை. போப்பாண்டவரை சந்திக்கத் திட்டமிட்டிருந்த செர்பிய அதிபர் பயணத்தை ரத்து செய்து விட்டு தனது மாளிகைக்குத் திரும்பி விட்டார்.
இதுகுறித்து அதிபரின் உதவியாளர் ஒருவர் கூறுகையில், இது மிகவும் ஓட்டை உடைசலான விமானம். தற்போது பல்லைக் காட்டி விட்டது. இனிமேல் இதில் நான் ஏறவே மாட்டேன். அனைவரும் சிறிது நேரம் பயந்து விட்டோம் என்றார்.
இருப்பினும் விமானத்தின் மீதுதவறு இல்லை. துணை பைலட் மீதுதான் தவறு என்று தெரிய வந்துள்ளது. துணை பைலட் போஜன் ஜோரிக், பயணத்தின்போது காபி குடித்துள்ளார். அப்போது கைதவறி காபி பேனல் மீது கொட்டி விட்டது. இதையடுத்து அதைத் துடைக்க முயற்சித்தார் போஜன். அப்போது சற்று அழுத்தித் துடைத்தபோது, ஆட்டோ பைலட் ஆப் ஆகி விட்டது. இதனால்தான் திடீரென உயரம் குறைந்து விமானம் குலுங்கி விட்டது.
அதன் பின்னர் பைலட் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். மீண்டும் பெல்கிரேடுக்கே விமானத்தைத் திரும்பிபனார். தற்போது துணை பைலட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications