நகைக்கடையை கொள்ளையிட்ட திருடன்... முத்த தடயத்தால் போலீசில் சிக்கிய வேடிக்கை
பாரீஸ்: பிரான்சில் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது அதன் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது.
முன்பெல்லாம் கைரேகையை மட்டும் வைத்து திருடர்களை, கொலையளிகளை போலீசார் கண்டுபிடிப்பார்கள். ஆனால், அறிவியலின் வளர்ச்சியால் தற்போது உதட்டு ரேகைகளைக் கொண்டும் குற்றவாளிகளை பிடித்து விடுகிறார்கள். அதற்கு பிரான்சில் நடந்த இச்சம்பவத்தையும் ஒரு உதாரணமாகக் கூறலாம்.
பிரான்சு நாட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார் 56 வயது பெண் ஒருவர். சமீபத்தில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்குள் முகமூடிக் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளரை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி, நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் எரித்து விடுவோம் என மிரட்டியுள்ளனர் கொள்ளையர்கள்.
உயிருக்கு பயந்த அந்த பெண்ணும் நகைக்கடைச்சாவியை திருடனிடம் கொடுத்துள்ளார். சாவியைப் பெற்றுக் கொண்டு ஒரு திருடன் மட்டும் கடைக்குச் சென்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு வந்துள்ளான்.
பின்னர் அனைத்து திருடர்களும் அப்பெண்ணின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அப்போது வீட்டில் பெண்ணிற்கு காவல் இருந்த இரண்டு கொள்ளையர்களும் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
திருடர்கள் சென்றப் பின் போராடி தனது கட்டுகளை அவிழ்த்த அப்பெண், உடனடியாக கொள்ளை சம்பவம் குறித்துப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேறு தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில் பெண்ணின் கன்னத்தில் இருந்த உதட்டு ரேகைகளை தடவியல் நிபுணர்கள் பொடியை தூவி சேகரித்தனர்.
அந்த முத்த தடயத்தை டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பியதில் தேசிய மரபணு தகவல் தொகுப்பில் அத்திருடனை பற்றிய விவரம் இருப்பதை அறிந்து அவனை கைது செய்துள்ளனர். ஏற்கனவே, சம்பந்தப்பட்ட அந்தத் திருடன் பிரான்சின் நைம்ஸ் சிறையில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் பிடிபட்ட திருடன், ‘கொள்ளை தொடர்பான அதிர்ச்சியிலிருந்து அப்பெண் மீள்வதற்காகவே அவரது கன்னத்தில் முத்தமிட்டதாக' விளக்கமளித்துள்ளானாம்.












Click it and Unblock the Notifications