1967ல் இறந்த ஜின்னாவின் தங்கைக்கு ரூ.2,63,774 குடிநீர் கட்டண பாக்கி கேட்டு நோட்டீஸ்!
கராச்சி: ஜின்னா மற்றும் அவரது தங்கை பாத்திமா வாழ்ந்த வீட்டிற்கு குடிநீர் கட்டணத்தை செலுத்த கோரி 47 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கராச்சி குடிநீர் வாரியம்.
பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த முகம்மது அலி ஜின்னாவின் தங்கை பாத்திமா ஜின்னா. இவர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இந்நிலையில், இவர் தனது வீட்டிற்கு குடிநீர் கட்டணத்தை இன்னும் கட்டவில்லை என்றும், விரைந்து கட்டுமாறு அறிவுறுத்தியும் கராச்சி குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ளாக் ஸ்டாஃப் ஹவுஸ்...
1944ம் ஆண்டு பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னா ரூ 1.15 லட்சத்திற்கு வாங்கிய ‘ஃப்ளாக் ஸ்டாஃப்' வீடு தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இந்த வீட்டில் தான் 1948 -64 வரை அவரது தங்கை பாத்திமா ஜின்னா வசித்து வந்தார்.

தேர்தல் தோல்வி...
1965-ல் தேர்தல் தோல்வியை அடுத்து அந்த வீட்டைக் காலி செய்த பாத்திமா, கடந்த 1967ம் ஆண்டு காலமானார்.

குடிநீர் கட்டண பாக்கி...
இந்நிலையில், தற்போது அருங்காட்சியகமாக உள்ள அந்த வீட்டிற்கு தான் ரூ.2,63,774 குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது கராச்சி குடிநீர் வாரியம். அதுவும் பாத்திமா ஜின்னா பெயரில்.

கைது...
மேலும், இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் பாக்கியை கட்ட வேண்டும் என்றும் அப்படி கட்டவில்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவது மட்டுமின்றி, வீட்டு உரிமையாளரைக் ( அதாவது மறைந்த பாத்திமாவை) கைது செய்வோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ் வாபஸ்...
அந்நாட்டு ஊடகங்களில் இந்த நோட்டீஸ் தொடர்பான செய்தி வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நோட்டீசை திரும்ப பெறுமாறு கராச்சி கமிஷனர் அங்குள்ள குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications