இந்தியாவிடம் சீனா தோற்றுவிட்டது.. ஜனநாயக முறையில் மோடி சாதனை.. கொரோனா விஷயத்தில் புகழ்ந்த ஜோ பிடன்!
டோக்கியோ: ‛‛கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் இந்தியாவை ஒப்பிடும்போது சீனா தோல்வியடைந்துள்ளது. மேலும் சர்வாதிகார போக்கில் செயல்படும் சீனா, ரஷ்யா நாடுகளுக்கு மத்தியில் ஜனநாயக முறையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்'' என அமெரிக்க அதிபர் ஜோபைடன் புகழ்ந்து பேசினார்.
Recommended Video
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் அமைப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் குவாட் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனி விமானத்தில் டோக்கியோ சென்றார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி ஆல்பென்ஸ் ஆகியோரும் அங்கு சென்றனர்.

குவாட் மாநாடு
இன்று குவாட் மாநாடு நடந்தது. ஜப்பான்பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பென்ஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர். இந்தோ பசிபிக் பிராந்தியம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டின்போது தலைவர்கள் தனித்தனியே சந்தித்து தங்கள் இருநாட்டுகளின் உறவு பற்றியும் பேசினார்.

பிரதமர் மோடி பேச்சு
இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம், முதலீடு, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இந்த வேளயைில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛ இந்தியா-அமெரிக்காவின் கூட்டு நட்புறவு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவாக உள்ளது'' என்றார்.

புகழ்ந்து தள்ளிய ஜோபைடன்
இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறுகையில், ‛‛கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் இந்தியா ஜனநாயக முறையில் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. சீனா, இந்தியா ஏறக்குறைய மக்கள் தொகையில் இணையானதாக உள்ளன. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த கையாண்ட விதத்தில் இந்தியாவை ஒப்பிடும்போது சீனா தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஜனநாயக முறையில் எதை வேண்டுமானாலம் சாதிக்கலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். மேலும் சர்வாதிகார போக்கால் மட்டுமே உலகை சிறப்பாக கையாள முடியும் என சீனா, ரஷ்யா செயல்பட்டு வரும் நிலையில் அதன் நம்பிக்கையை இந்தியா முற்றிலுமாக சிதைத்துள்ளது'' என புகழ்ந்து தள்ளினார்.

முன்கூட்டி தயார் செய்யப்படாத உரை
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், " ஜோபைடனின் இந்த பேச்சு முன்கூட்டியே தயார் செய்யப்படவில்லை. அவர் தனது மனதில் இருந்து பேசியுள்ளார். அவர் பேச வேண்டிய உரைக்கு முன்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்'' என்றார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஜப்பான்பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் இந்தியாவை பாராட்டினார்.

ஜப்பான், ஆஸ்திரேலியா பிரதமர்
இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பேசுகையில், ‛‛குவாட் அமைப்பின் தடுப்பூசி வினியோகத்துக்கு இந்தியா பங்களிப்பு செய்துள்ளது. இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாய்லாந்து, கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
இதுபற்றி ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி ஆல்பென்ஸ் கூறுகையில், ‛‛இக்கட்டான சூழலில் இந்தியா சார்பில் ஏராளமான நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தியல் சார்ந்த விவாதத்தில் வெற்றி பெறுவதை விட இத்தகைய செயல் மூலம் கிடைக்கும் வெற்றி மிகவும் மதிப்புமிக்கது'' என்றார்.












Click it and Unblock the Notifications