பாக்தாத்தில் ஜான் கெர்ரி.. தல் அஃபாரை முழுமையாக வசப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!
பாக்தாத்: அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் முகாமிட்டிருந்த நேரத்தில் தல் அஃபார் என்ற முக்கிய நகரை முழுமையாக தங்களது வசமாக்கிவிட்டனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.
ஈராக்கின் ஷியா அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். -ன் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் தலையிடத் தொடங்கியுள்ளது.
ஜோர்டானில் இருந்து ஈராக்குக்கு நேற்று அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வருகை தந்தார். அவர் ஈராக் அரசு தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆலோசித்தார்.
இந்த சந்திப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வடக்கு ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான தல் அஃபாரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டுவந்தனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.
அந்த நகரத்தின் விமான நிலையத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு சிவில் நிர்வாகத்தை கட்டமைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதன் மூலமாக ஒட்டுமொத்த வடக்கு ஈராக் நகரங்களுமே முழுமையாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கீழ் வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.