"கோட் ரெட்.." ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? நிலைமை கையை மீறி போகுதா! என்ன நடக்கிறது
ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா காரணம் என்று அந்நாட்டு அரசு சம்பந்தமே இல்லாமல் சொல்வதே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே இப்போது சொந்த கட்சியிலேயே ட்ரூடோவுக்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்துள்ளது.
கனடா நாட்டில் இப்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். கடந்த 2021ல் நடந்து பிரதமர் தேர்தலிலேயே அவரால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்தார்.

இதற்கிடையே அவருக்கு உள்கட்சியிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ட்ரூடோவின் லிபரல் எம்பிக்கள் நேற்று மீண்டும் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ: ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், அதில் அதிருப்தி எம்பிக்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாகப் போட்டு உடைத்தனர். இது கட்சிக்குள் ட்ரூடோவுக்கு எதிராக வளர்ந்து வரும் அதிருப்தியைக் காட்டுவதாகவே இருக்கிறது. ட்ரூடோ மீதான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், வரும் அக். 28ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும் என்று சொந்த கட்சி எம்பிக்களே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரூடோ ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அக். 28ம் தேதிக்குள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அவர் ராஜினாமா செய்ய மறுத்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அதில் எதுவும் விளக்கப்படவில்லை.
ராஜினாமா செய்யணும்: ட்ரூடோவின் சொந்த கட்சியில் இருந்து 24 எம்பிக்கள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா எம்பி பேட்ரிக் வெய்லர் என்பவர் தான், ட்ரூடோவின் ராஜினாமாவுக்கான ஆவணத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
கனடாவில் லிபரல் கட்சி மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. சர்வதேச சிக்கல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆளும் லிபரல் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அடுத்த தேர்தலில் வெல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழலே இருக்கிறது. இந்த நேரத்தில் ட்ரூடோ விலகினால் அது அதிருப்தியைக் குறைக்கும் என்பதே லிபரல் கட்சி எம்பிக்களின் கருத்தாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்படி பைடன் போட்டியில் இருந்து விலகி பிறகு, ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததே அதேபோல கனடாவிலும் நடக்கும் அதிருப்தி எம்பிக்களின் கருத்தாகும்.
3 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் பல்வேறு எம்பிக்களும் அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோ தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், பல எம்பிக்கள் ட்ரூடோவுக்கு ஆதரவாகவே இருப்பதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
கோட் ரெட் இல்லை: இது தொடர்பாக ட்ரூடோ அமைச்சரவையில் உள்ள, மார்க் மில்லர் கூறுகையில், "எம்பிக்கள் சிலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். அவர்கள் நேரடியாக ட்ரூடோவிடம் இது குறித்து முறையிட்டனர். அதேநேரம் இது ஒன்றும் கோட் ரெட் இல்லை.. பிரதமரால் இந்த பிரச்சினைகளை எளிதாகக் கையாள முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications