அமெரிக்காவில் கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம்
டல்லாஸ் : அமரர் கல்வியின் படைப்புகளில் ஒன்றான சிவகாமியின் சபதம் காவியத்தை, நாட்டிய நாடகமாக மதுரை R முரளிதரன் உலகெங்கும் நடத்தி வருகிறார். டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் சார்பில், டல்லாஸிலும், சான் அன்டோனியோ நகரிலும் நடைபெற்றது.
டிஜிட்டல் அரங்கம்
நவீன ஒளி அமைப்புடன், தத்ருபமான பின்னணி காட்சிகள் திரையிடப்பட்டு, அதன் முன்பாக நூறு பேர் கொண்ட குழுவினருடன் மதுரை R முரளிதரன் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். டல்லாஸ் டவுண்டவுன் பகுதியில் ஆங்கில நாடகங்கள் நடைபெறும், புகழ்வாய்ந்த பழம்பெரும் மெஜஸ்டிக் அரங்கத்தில், ஆங்கில ப்ராட்வே ஷோவுக்கு நிகராக தமிழ்க் காவியம் அரங்கேறியது சாதனைக்கு உரியதாகும்.
மேடையில் இரட்டை வேடம்
சாளுக்கிய புலிகேசி மற்றும் நாகநம்பி என்ற புத்தபிக்கு என இரட்டைவேடத்தில் முரளிதரன் நடித்திருந்தார். ஒரு காட்சியில் இருவரும் சந்தித்துக் கொள்வது போன்ற காட்சியை மிகவும் சாமர்த்தியமாக வடிவமைத்திருந்தார். சிறுவயது சிவகாமியாக காவ்யா முரளிதரனும், சபதத்தை நிறைவேற்றும் சிவகாமியாக உமா முரளியும், நடித்து சிறப்பாக நடனமாடினார்கள். மகேந்திர பல்லவராக எத்தின் அகர்வால் நடித்திருந்தார். தற்போது டல்லாஸில் வேலை பார்த்துவரும் இவர் பஞ்சாபை சார்ந்தவர். சென்னையில் வளர்ந்து முறைப்படி நடனம் பயின்றவர்.
நரசிம்ம பல்லவராக திரு அன்னாசாமியும் சிவகாமியின் தந்தையாக சான் அன்டோனியோ டாக்டர்.ஸ்ரீதராவும் நடித்திருந்தார்கள். பரஞ்சோதியாக ரவி சுப்ரமணியன், திருநாவுக்கரசராக சுப்ரா சொக்கலிங்கம், வானமாதேவியாக அலீனா தாமஸ் மற்றும் சிவகாமியின் தோழியாக கிரிஜா ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.
டல்லாஸ் நடன ஆசிரியைகள்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான இந்த நாடகத்தின் பெரும்பகுதி நடனம் சார்ந்தது. அனைத்து நடனங்களையும், டல்லாஸில் வாழும் நடன ஆசிரியர்கள், உள்ளூர் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சிறப்பாக வடிவமைத்திருந்தனர். ராதிகா கணேஷ், வந்திதா பரேக், பிரதிபா நடேசன், மற்றும் சூர்யா ரவி உள்ளிட்ட நடன ஆசிரியர்கள் சுமார் 6 மாத காலம் பயிற்சி அளித்து வந்தனர். உடையலங்காரம் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளையும் ராதிகா கணேஷ் கவனித்துக் கொண்டார்.
ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு விதமான நடனம், மற்றும் உடையலங்காரம் என நடனக்கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றினர். மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் நடனம் என நாட்டுப்புற நடனங்களும் இடம்பெற்றிருந்தன. முரளிதரன பாடல்களை இயற்றி இசையமைத்திருந்தார்.
டல்லாஸ் மையப்பகுதியில் மினி தமிழ்நாடு
பொதுவாக தமிழ் நிகழ்ச்சிகள் புறநகர்ப்பகுதிகளில் உள்ள அரங்கங்களில் நடைபெறுவது வழக்கம். சிவகாமியின் சபதம், ப்ராட்வே ஸ்டைலில் அரங்கேற்றப்படுவதால், நகரின் மையப்பகுதியில் உள்ள ப்ராட்வேஷோக்கென்று அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தை தமிழ்ச்சங்கம் சார்பில் வெகு நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்து இருந்தனர். நிகழ்ச்சி அன்று, டல்லாஸ் நகரின் மையப்பகுதியில் சுமார் 1000 தமிழர்கள் குழுமிவிட்டனர்.
டல்லாஸா.. சென்னையா?
இடைவேளை நேரத்தில், சுடச்சுட சமோசா, கட்லெட், வடை, டீ,காபி விற்பனை ஜோராக நடைபெற்றபோது. ஏதோ சென்னை அரங்கம் ஒன்றுக்கு வந்துவிட்டோமோ என்ற அளவிற்கு மினி தமிழ் நாடாக காட்சி அளித்தது. அரங்கில் வேலை பார்க்கும் அமெரிக்கர்களும் இது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார்கள், மொழி புரியாத போதிலும் நாட்டிய நாடகத்தை வெகுவாக ரசித்ததாகவும் தெரிவித்தனர். வருகை தந்திருந்த தமிழர்கள் பெரும்பாலோனோரும் தமிழ்நாட்டுக்கே சென்று வந்த உணர்வு கிடைத்ததாக கூறினர்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பொருளாளர் தமிழ்மணி வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார். தலைவர் கீதா அருணாச்சலம் நன்றியுரை கூறினார். ஏற்புரை ஆற்றிய மதுரை முரளிதரன், தமிழர்களின் பாரம்பரியக் கலையை, தமிழர்களின் வரலாற்றுக் காவியங்களுடன் தான் படைத்துவரும் நிகழ்ச்சிகளுக்கு, தமிழர்கள் அளித்து வரும் பேராதரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் உட்பட அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் தங்களுக்கு உறுதுணையாக இருந்து உற்சாகமூட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இரண்டு நகரிலும் ஒரே நடனக் குழுவினர்
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, தன்னார்வத் தொண்டர்களின் துணையோடு, தலைவர் கீதா, உபதலைவர் செல்வமணி, செயலாளர் கஸ்தூரி, பொருளாளர் தமிழ்மணி, இணைச்செயலாளர் இளங்கோவன், இணைப் பொருளாளர் ராம் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்ச்சங்கத்தின் இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. பொதுவாக உள்ளூர் நடனக் கலைஞர்கள் அந்தந்த ஊர்களில் மட்டுமே பங்கேற்பார்கள். ஆனால், டல்லாஸிலிருந்து அனைத்து நடனக் கலைஞர்களையும் அழைத்துச் சென்று சான் அன்டோனியோ நகரிலும் சிவகாமியின் நாட்டிய நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றினர்.