காஷ்மீர் பிரச்சினைக்கு வெளிப்படையான அமைதிப்பேச்சு மூலமே தீர்வு: பாக். பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் கழுத்து எலும்பு. காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 4-வது யுத்தத்திற்கு வழிவகுக்கும் ' என பேசியதாக செய்திகள் வெளியாகின.
பின்னர், தாங்கள் அவ்வாறு கூறவில்லை என உடனடியாக மறுப்புத் தகவலும் பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் முரண்பட்ட பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ‘எனது வாழ்நாளில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றிபெறும் என்ற பேச்சிற்கே இடமில்லை' எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கு முற்ருப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஐஜாஸ் சவுத்ரி கூறியிருப்பதாவது :-
சியாச்சின் பனிமலைகளில் இருந்து முற்றிலும் ராணுவம் வெளியேறவேண்டும். அங்கு ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது. காஷ்மீர் பிரச்சினை அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்காக நாங்கள் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
காஷ்மீர் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றுகூட நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் தார்மீக மற்றும் ராஜ்ய ஆதரவு அளித்து வருகிறோம். நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாடுகளும் வெளிப்படையாக பேச வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications