வெஸ்ட்மால் தாக்குதலின் போது திருட்டில் ஈடுபட்ட 2 வீரர்கள் கைது: செல்போன், கேமரா பறிமுதல்
நைரோபி: 67 பேர் பலியான கென்யா தாக்குதலின் போது திறந்திருந்த கடைகளில் புகுந்து திருட்டு போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கென்யத் தலைநகர் நைரோபியில் வெட்ஸ்மால் வணிக வளாகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது அங்கு கடை வைத்திருக்கும் முதலாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து, கடைகள், பணப்பெட்டி போன்றவற்றை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட வீரர்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல்...
கென்யாவின் தலைநகரான நைரோபியில் இஸ்ரேல் நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகம் உள்ளது. பணக்காரர்கள் அதிகம் வந்துபோகும் இந்த வளாகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி ஷெபாப் தீவிரவாதிகள் அதிரடியாக உட்புகுந்து தாக்குதல் நடத்தினர்.

67 பேர் பலி....
இதில், அப்பாவி பொதுமக்கள் 67 பேர் பரிதாபமாக பலியாயினர். அப்போது தீவிரவாதிகளை அழிக்க பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 5 நாட்களுக்குப் பிறகு, ஒருவழியாக தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டு வணிக வளாகம் ராணுவத்தினர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

திருட்டு...
தாக்குதல் சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, தங்களது கடைகளுக்கு வந்த உரிமையாளர்கள் ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டனர்.

கேட்பாரற்றுக் கிடந்தன....
தீவிரவாதிகள் சுடத் தொடங்கியதும் உயிருக்கு பயந்த கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை திறந்து போட்டுவிட்டு சென்றதால் அந்த வர்த்தக வளாகத்தில் உள்ள நகை கடைகள், செல்போன் கடைகள், விலை உயர்ந்த 'ரேடோ' வாட்ச் கடைகள், லேப் டாப் கடைகளில் இருந்த ஏராளமான பொருட்கள் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.

சந்தேகம்...
அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட ராணுவத்தினர் கல்லாவில் இருந்த பணம் உட்படகடையில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் பலவற்றை கொள்ளையடித்து சென்றதாக சந்தேகிக்கப் பட்டது.

குற்றச்சாட்டு...
அதேபோல், தாக்குதலில் பலியானவர்களின் உடலையும் சோதித்து அவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும் ராணுவ வீரர்கள் அபகரித்துச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்தனர்.

கைது....
இந்நிலையில் வணிக வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப் பட்ட இரண்டு கென்ய வீரர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த விலையுயர்ந்த மொபைல் போன்கள், கேமரா மற்றும் ஆபரணங்கள் போன்றவை கைப்பற்றப் பட்டுள்ளன.

தொடரும் சம்பவங்கள்...
இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் நைரோபி விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் அங்கிருந்த பொருட்களைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications