ஹாட்ரிக்.. மீண்டும் சீன அதிபரான ஜி ஜின்பிங்.. பாராட்டி வாழ்த்திய பினராயி விஜயன்..சொன்னத பாருங்க!ஆஹா
சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இந்த கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
பெய்ஜிங்: சீனாவில் ஒற்றை அரசியல் கட்சி நடைமுறை உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த ஜி ஜின்பிங் 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். சீனாவை பொறுத்தமட்டில் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்கும் முடியும் என இருந்த விதிகளை மாற்றி ஜி ஜின்பிங் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தான் பினராயி விஜயன், ஜி ஜின்பின்னை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனா... வடகொரியாவை போன்று மர்மமான தேசங்களில் ஒன்றாக தான் உள்ளது. இங்கிருந்து பல தகவல்கள் தற்போது பொதுவான அமைப்புகளுக்கு வழங்கப்படுவது இல்லை. குறிப்பாக கொரோனா பாதிப்பு, பலி உள்ளிட்ட விபரங்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு அந்நாடு வழங்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் மக்களை தாக்கி உலகத்தையே முடக்கியது என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் அதுதொடர்பான விசாரணை மற்றும் ஆய்வுக்கும் ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளதாக புகார்கள் உள்ளன.

3வது முறையாக அதிபர்
மேலும் சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் இந்தியாவிடம் மோதல் போக்கில் ஈடுபடுகிறார். இதேபோல் அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேலும் தைவானையும் சீனாவுடன் இணைப்பதாக கூறி போர் அச்சுறுத்தல் செய்து வருகிறார். இதனால் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்ற பொதுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் சீன அதிபராக 3வது முறையாக நேற்று ஜி ஜின்பிங் பொறுப்பேற்றார்.

ஒற்றை கட்சி முறை
சீனாவில் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜின்பிங் நேற்று பதவியேற்றார்.

விதிகளை மாற்றிய ஜி ஜின்பிங்
சீனாவை பொறுத்தமட்டில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற விதிகள் இருந்தன. ஆனால் அதிபர் பதவிக்கு வந்தது முதல் தனது போட்டியாளர்களை ஓரங்கட்டி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைப் பதவிகளை தனது ஆதரவாளர்கள் மூலம் நிரப்பிய ஜி ஜின்பிங் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்தார். 2018ல் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற சட்டத்தை நீக்கிய நிலையில் தற்போது அவர் அதிபர் பதவியை தக்க வைத்துள்ளார்.

பாரம்பரியத்தை உடைக்கும் நபராக..
இதன்மூலம் ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் 3வது முறையாக அதிபராகி உள்ளார். இதன்மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபராகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக ஜின்பிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பாரம்பரியத்தை ஜி ஜின் பிங் உடைத்திருந்தார்.

பினராயி விஜயன் வாழ்த்து
இந்நிலையில் தான் 3வது முறையாக சீன அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜி ஜின்பிங்கிற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கிற்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள். உலக அரசியலில் சீனா ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மேலும் வளமான நாடாக சீனாவை மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளா்.












Click it and Unblock the Notifications