லிபியாவில் கடத்தப்பட்ட கேரள ஐடி பொறியாளர் விடுதலை
திரிபோலி: லிபியாவில் கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஐடி பொறியாளர் ரெஜி ஜோசப் தற்போது விடுதலை செய்யப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூரசுண்டு பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜோசப். இவர் லிபியாவின் திரிபோலி யில் உள்ள அல் திவான் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். லிபியா நாட்டில் வாழும் மக்கள் தொகை புள்ளி விபரங்களை தொகுப்பது தொடர்பாக கணினியில் தகவல் கட்டமைப்பு (டேட்டாபேஸ்) வசதியை உருவாக்கும் கட்டமைப்பு பணியில் அவர் ஈடுபட்டு வந்தார்

இவரது மனைவி ஷின்ஜு தங்கச்சனும் லிபியாவில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் திடீரென மாயமானார் ரெஜி. வீட்டில் இருந்த ரெஜியை அவர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அனுப்பி வலுக்கட்டாயமாக தனது இடத்துக்கு அழைத்து சென்றதாகக் கூறப்பட்டது.
அங்கு சென்றதும் பணியிடத்துக்கு பாதுகாப்பாக சென்றுவிட்ட தாக மனைவிக்கும், கேரளாவில் உள்ள தனது சகோதரர் ஜோ ஜோவுக்கும், ரெஜி போனில் தகவல் அனுப்பியுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. ரெஜி பணியாற்றும் நிறுவன உரிமையாளர் அவர் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துவிட்டு, வேறு தகவல்களை கூற மறுத்துள்ளார்.
இதனால் ரெஜியை தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என அவரது மனைவியும் குடும்பத்தினரும் சந்தேகித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடமும் அவர்கள் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரெஜியை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரெஜி விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், திரிபோலியில் அவரது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், விரைவில் அவர் பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications