நினைவிருக்கா பிரதமர் மோடி பாராட்டினாரே கிலி பால்.. டான்சானியாவில் மர்ம கும்பலால் கடும் தாக்குதல்!
டோடோமா: டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கிலி பால். இவரது சகோதரி நீமா. இவர்கள் இருவரும் ரீல்ஸ் மூலம் இணையதளத்தில் கலக்கி வருகிறார்கள்.
வெளிநாட்டை சேர்ந்தவர்களான இவர்கள் கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு நன்கு பொருந்தும்படியாக வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு பிரபலமாகினர். இவர்கள் இருவரும் கால்நடைகளை மேய்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்திருந்ததோடு கியாரா அட்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, எம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர்.

குடியரசுத் தினம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியரசுத் தினத்தன்று இவர்கள் இந்திய நாட்டின் தேசிய கீதத்தை பாடியிருந்தனர். அது போல் பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானதை அடுத்து அவருக்கு அவரது பாடல்களை பாடி மரியாதை செலுத்தினர். இவற்றை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கிலி பாலுக்கு மன் கீ பாத்தில் பாராட்டு தெரிவித்தார்.

இந்தி மீது காதல்
தாய்மொழி வேறு என்றாலும் முற்றிலும் சம்பந்தமே இல்லாத இந்தி மொழியில் எப்படி பாடல்களை பாடுகிறீர்கள் என கிலி பாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பள்ளியில் படிக்கும் போதே எனக்கு இந்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போல் இந்தி படங்களையும் பிடிக்கும். நீங்கள் ஒன்றை விரும்பிவிட்டால் அது நிச்சயம் அதை பாடுவதற்கோ வாயசைப்பதற்கோ கடினமாக இருக்காது என்றார்.

5 பேர் கொண்ட கும்பல்
இந்த நிலையில் கிலி பாலை யாரோ 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில் என்னை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கினர். அப்போது என்னை பாதுகாக்க கைகளால் தடுக்க முற்பட்ட போது உள்ளங்கையில் கத்தியால் கிழித்துவிட்டனர்.

5 தையல்கள்
இதனால் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் கட்டைகளை கொண்டும் என்னை தாக்கினார்கள். நல்ல வேளையாக கடவுள் அருளால் இருவரை அடித்து நான் என்னை உயிருடன் தற்காத்து கொண்டேன். இதனால் அந்த இருவரும் ஓடிவிட்டார்கள். எனினும் அதற்கு முன்னே எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மிகவும் அச்சமாக இருக்கிறது என கூறியுள்ளார். அத்துடன் அவர் தனது யூடியூப் சேனலில் ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications