இது கொஞ்சம் ஓவர்தான்..மகளுக்காக கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு.. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்
மகளின் பெயரை நாட்டில் வேறு யாரும் வைத்திருக்கூடாது என்ற வினோத உத்தரவை வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் பிறப்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பியாங்யாங்: வடகொரியாவில் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை பொதுவெளியில் அழைத்து வந்தார். தனது அரசியல் வாரிசாக மகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் கிம் ஜாங் அன் தனது மகளை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தலாம் என்று சர்வதேச நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, தனது மகளின் பெயரை நாட்டில் வேறு யாரும் வைத்திருக்கூடாது என்ற வினோத உத்தரவை கிம் ஜாங் உன் பிறப்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. வடகொரிய அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.
அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை கிம் ஜாங் அன் அச்சுறுத்தி வருகிறார். அதேபோல், வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் உறுதியாக தெரியாது.

வடகொரியாவின் அடாவடி செயல்
அந்த நாட்டு மக்களும் எந்த வித வெளி உலக தொடர்பும் இல்லாமலே வைக்கப்பட்டனர். ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, கருத்து சுதந்திரங்கள் அறவே கிடையாது, சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி கிடையாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன் செய்திகள் கூட வடகொரியா அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே வெளியிட முடியும் என்று சொல்லப்படுகிறது. வடகொரியாவின் அடாவடி செயலுக்கு பதிலடியாக சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இதனால், அந்த நாட்டில் கடுமையான பஞ்சமும் நிலவி வருகிறது.

சிரிப்பதற்கு தடை
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பல வினோத கட்டுப்பாடுகளும் வடகொரியாவில் விதிக்கப்பட்டு வருகிறது. சிறிய தவறுகளுக்கு கூட மிகக் கொடூரமான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. அதேபோல், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரவிட்டு இருந்தார்.

2 சிறுவர்களுக்கு மரண தண்டனை
அதேபோல், சிகை அலங்காரம் கூட குறிப்பிட்ட வடிவில்தான் இருக்க வேண்டும் என்று கூட அந்ந நாட்டில் கட்டுப்பாடுகள் உள்ளதாம். வெளிநாட்டு சீரியல்கள் மற்றும் படங்களுக்கு தடை உள்ளது. தடையை மீறி தென்கொரிய நாட்டு சீரியல்களை பார்த்ததற்காக 2 சிறுவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டது கூட நினைவிருக்கலாம். இப்படி இஷ்டத்திற்கு ஆட்சி நடத்தும் கிம் ஜாங் உன் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மகளை அறிமுகம் செய்த கிம் ஜாங் அன்
அதாவது, தனது மகளின் பெயரை வடகொரியாவில் எந்த ஒரு குடிமக்களும் வைக்கக் கூடாது என்பதே அந்த புதிய உத்தரவாம். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். தனது நாட்டைப் போலவே குடும்பம் பற்றியும் ரகசியம் காத்து வந்த கிம் ஜாங் அன் சமீபத்தில்தான் தனது மகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தினர்.

பெயரை யாருக்கும் வைக்கக்கூடாது
சமீப காலமாக ராணுவ கூட்டங்களுக்கு கூட தனது மகளுடன் கிம் ஜாங் அன் வலம் வருகிறார். கிட்டத்தட்ட 10 வயது இருக்கக் கூடும் என்று நம்பப்படும் கிம் ஜாங் உன்னின் மகள் பெயர் ஜூ ஏ என்பதாகும். இதனால், நாட்டில் யாருக்கு எல்லாம் ஜூ ஏ என்று பெயர் இருக்கிறதோ அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து பெயரை மாற்றச் சொல்லி வருகிறர்களாம் வட கொரிய அதிகாரிகள். அதுபோக புதிதாக ஜூ ஏ என்ற பெயரை யாருக்கும் வைத்து விடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்குள் மாற்றவேண்டும்
ஒருவாரத்திற்குள் ஜூ ஏ என்ற பெயர் கொண்ட பெண்கள் உடனடியாக தங்கள் பெயரை மாற்றி விட வேண்டும் என்று வடகொரிய அதிகாரிகள் உத்தரவு போட்டு இருக்கிறார்களாம். ஒரு வாரத்திற்குள் பெயரை மாற்ற வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் அந்த நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரை வைத்துக்கொள்ள ஏற்கனவே தடை அமலில் இருப்பதாக சீன ஊடகமான சவுத் சீனா மார்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வளவு ஏன் கிம் ஜாங் அன் பெயரைக் கூட வேறு யாரும் வைத்துக்கொள்ள முடியாது அந்த நாட்டில்.












Click it and Unblock the Notifications