அமெரிக்காவைத் தாக்க "குட்டி" அணுகுண்டுகளைத் தயாரிக்கும் "குழந்தைச்சாமி"!
சியோல்: வட கொரிய சர்வாதிகரா கிம் ஜோங் உன்- னிடம் கிட்டத்தட்ட 6000 பேர் கொண்ட ஹேக்கர் பட்டாளமே உள்ளதாம். இதை வைத்து தனது அரசு நிர்வாகம் மற்றும் ராணுவ கம்ப்யூட்டர் கட்டமைப்புகளை சீர்குலைக்க அவர் திட்டமிட்டு வருவதாக தென் கொரியா புகார் கூறியுள்ளது. ஆனால் அதை விட முக்கியமாக அமெரிக்காவைத் தாக்கக் கூடிய திறன் படைத்த சிறிய வகை அணுகுண்டுகளை விரைவிலேயே வட கொரியா தயாரிக்கப் போவதாகவும் தென் கொரியா புதிய குண்டை வீசியுள்ளது.
கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து நகரங்களையும் தாக்கக் கூடிய வகையிலான திறனை சீக்கிரமே வட கொரியா பெறும் என்றும் தென் கொரியா எச்சரித்துள்ளது. வட கொரியாவின் ராக்கெட் தொழில்நுட்பம் மிகவும் அதி நவீனமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் அதிக கதிர்வீச்சுக்களை ஏற்படுத்தக் கூடிய அதேசமயம் சிறிய அளவிலான அணுகுண்டுகளை வட கொரியா தயாரித்து வருவதாகவும் தென் கொரியா கூறியுள்ளது.
தனது புத்தாண்டு உரையின்போது, தென் கொரியாவுடன் பேச்சு நடத்த தான் தயாராக இருப்பதாக கிம் கூறியிருந்த நிலையில், தற்போது தென் கொரியா இப்படிக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பு வட கொரியா வசம் 3000 ஹேக்கர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர்களிடம் 6000 பேர் உள்ளதாக தென் கொரியா கணித்துள்ளது. சமீபத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவன இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. வட கொரியர்கள்தான் இதற்குக் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து வட கொரியா முழுவதும் இணையதள சேவை ஸ்தம்பித்துப் போனது. இதற்கு அமெரிக்காதான் காரணம் என்று வட கொரியா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தனது அணு உலைகள் தொடர்பான கம்ப்யூட்டர் கட்டமைப்பை ஹேக் செய்ய வட கொரியா முயற்சித்ததாகவும், அதை தாங்கள் முறியடித்து விட்டதாகவும் தென் கொரியா கூறியுள்ளது.
கடந்த வாரம், இமெயில் அல்லது பைல் ஷேரிங் மூலமாக பரவும் வைரஸை தாங்கள் கண்டுபிடித்து அழித்ததாக தென் கொரிய ஐடி நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்த வைரஸை வட கொரியாதான் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும் கொரியா ஹைட்ரோ மற்றும் அணு மின் சக்தி நிறுவனம், தனது டேட்டாக்கள் சிலவற்றை ஹேக்கர்கள் திருடி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. அதேசமயம், அணு உலைகளுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அது அறிவித்திருந்தது.
தனது நிர்வாகத்தை சீர்குலைக்க வட கொரியா முயல்வதாக தென் கொரியா கூறியுள்ள குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்காவைக் குறி வைத்து சிறிய வகை அணு குண்டுகளை வட கொரியா தயாரித்து வருவதாக அது கூறியிருப்பதுதான் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications