நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி? சத்தமில்லாமல் மன்னர் ஞானேந்திர ஷா போடும் கணக்கு! ஷாக் பின்னணி
காத்மண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அங்கு மக்கள் போராட்டம் வன்முறையாக மாறி தொடரும் நிலையில், பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். இப்போது வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நேபாள ராணுவம் இறங்கியுள்ளது. இதற்கிடையே அங்கு மீண்டும் மன்னராட்சி வரும் சூழலும் உருவாகியுள்ளது போலவே தெரிகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
நேபாளம் என்பது ஜனநாயகத்திற்குப் புதிது. அங்கு 2008 வரையிலும் மன்னராட்சியே இருந்தது. 2008 மே 28ம் தேதி தான் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் தான் நேபாளத்தில் மன்னராட்சி ரத்து செய்யப்பட்டு, அது ஒரு கூட்டாட்சி ஜனநாயகம் நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அங்குக் கடந்த 240 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.. நேபாளம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்தது.

மன்னர் எங்கே?
மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு மன்னர் ஞானேந்திர ஷா இப்போது ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்து வருகிறார். அவர் காத்மண்டுவில் உள்ள நிர்மல் நிவாஸில் வசிக்கிறார். 2024 தொடக்கத்தில், அவர் நகர்ஜுன் மலைகளில் உள்ள ஹேமந்தபாஸ் என்ற விடுதிக்குக் குடிபெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராணி ரத்னா, அரச மாளிகை வளாகத்திற்குள் உள்ள மகேந்திர மாளிகையில் தொடர்ந்து வசித்து வருகிறார். இளவரசர்கள் உட்பட இளம் தலைமுறையினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். முன்னாள் பட்டத்து இளவரசர் பராஸ் மற்றும் இளவரசி ஹிமானியின் மகள் இளவரசி க்ரித்திகா ஷா, ஜூலை 2008இல் நேபாளத்தை விட்டு வெளியேறி சிங்கப்பூர் போய்விட்டனர். அவரது மூத்த சகோதரி இளவரசி பூர்ணிகா ஷாவும் 2008இல் நேபாளத்தை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் குடியேறினார்.
விலகியே இருந்தார்
இப்படி மன்னரும் மன்னர் குடும்பமும் 2008 முதலே பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் மன்னர் ஞானேந்திர ஷா மெல்ல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். குறிப்பாகக் கடந்த மார்ச் மாதம் ஞானேந்திர ஷா காத்மண்டு திரும்பியபோது, பல ஆயிரம் பேர் குடியிருந்து அவரை வரவேற்றனர்.
மேலும், கடந்த மே மாதம் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பேரன் ஹிருதயேந்திராவுடன் நாராயண்ஹிதி அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவர் குடும்பத்துடன் பூஜைகளை மேற்கொண்டார். அப்போதும் கூட மக்கள் ஆதரவு மன்னருக்குக் கணிசமாகவே இருந்தது.
மன்னராட்சிக்கு ஆதரவு
அரசுக்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது சரி, அதற்காக மன்னராட்சி வரும் என எப்படிச் சொல்லலாம் என்ற சந்தேகம் வரலாம். விஷயம் என்னவென்றால் அங்கு அரசுக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் மீண்டும் மன்னராட்சி வர வேண்டும் என்ற போராட்டங்கள் இன்னொரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் முதலே அங்கு மன்னராட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்து வந்தது. அதற்கு பெரியளவில் மக்கள் ஆதரவும் இருந்தது. மேலும் கடந்த மே மாதம், நவரஜ் சுபேதி தலைமையிலான மன்னராட்சி ஆதரவுக் குழுக்கள் நாடு தழுவிய போராட்ட பிரச்சாரத்தைத் தொடங்கின. நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் அளவுக்கு மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன.
ஞானேந்திர ஷா போடும் கணக்கு
முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கும் இதில் விருப்பம் இல்லாமல் எல்லாம் இல்லை. அவருக்கும் கூட அதிகாரத்திற்கு வர ஆசை தான். இதன் காரணமாகவே அவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது அதில் பல ஆயிரம் பேர் திரண்டனர்..
கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், அப்போதும் மன்னருக்கு ஆதரவான கோஷங்களைப் பார்க்க முடிந்தது. "மன்னா திரும்பி வாருங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்" என்ற கோஷங்களைக் கேட்க முடிந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!












Click it and Unblock the Notifications