அந்த அடி அடித்த அமெரிக்கா! ஆனாலும் ஈரானுக்கு உதவ முன் வராதது ஏன்? ரஷ்யா கொடுத்த விளக்கம் இதுதான்
மாஸ்கோ: ஈரான் தற்போது பயன்படுத்தி வரும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எல்லாம் செய்ய சொல்லி கொடுத்தது ரஷ்யாதான். இவ்வளவு தொழில்நுட்ப உதவிகளை செய்த ரஷ்யா, ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டபோதும், ஈரானுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவாதது ஏன்? என்று கேள்வி எழுந்தது. இதற்கு ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
இஸ்ரேல் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் ஷாஹெத் ரக ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. குறைவான உயரத்தில் பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த வகை ட்ரோன்கள் ரேடாரில் சிக்குவதில்லை. இதை வைத்துதான் ஈரான் ஆட்டம் காட்டி வருகிறது. இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை கொடுத்தது ரஷ்யாதான்.

நண்பேன்டா உறவு
அப்பேற்பட்ட நண்பேன்டா உறவு, இருந்தபோதிலும் ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அட்டாக் செய்யும்போது ரஷ்யா, ஈரானுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ரஷ்யா வரும், ஆட்டம் மாறும் என்றுதான் ஈரானும், அதன் ஆதரவு நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. அப்படி நடக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
விளக்கம் கொடுத்த ரஷ்யா
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது குறித்து கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிடம் எந்த இராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஈரானிடமிருந்து எந்த ராணுவ உதவி கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்று கூறிய அவர், எங்கள் நிலைப்பாடு ஏற்கனவே அனைவருக்கும் தெரியும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ரஷ்யாவுக்கும்-ஈரானுக்கும் இடையே ஒத்துழைப்பு குறித்த முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் ராணுவ உதவி குறித்து குறிப்பிடவில்லை. எனவேதான் ரஷ்யா இந்த விஷயத்தில் சைலண்டாக இருக்கிறது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்த ரஷ்யா, தாக்குதல்களை நிறுத்தும்படி வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications