பெண்களை செக்ஸ் அடிமைகளாக்கும் ஐஎஸ்ஐஎஸ்... லண்டனில் நடித்துக் காட்டிய குர்து ஆதரவாளர்கள்
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக்குகிறார்கள் என்பதை லண்டன் தெருக்களில் குர்து ஆதரவாளர்கள் நாடகம் போட்டு நடித்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நான்கு பெண்கள் இதில் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட குர்து போராட்டக்கார்ரகள் நடத்திய இந்த நூதன விளக்கப் போராட்டத்தால் லண்டன் நாடாளுமன்றப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு பெண்களையும் முகத்தை மூடி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஏலத்தில் எடுத்து அடிமைகளாக்குவது போல போராட்டக்காரர்கள் நடித்துக் காட்டினர்.
நாடாளுமன்ற பகுதியில்
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பும், லீசெஸ்டர் ஸ்கொயர் மற்றும் பிரதமரின் வீடு உள்ள டவுனிங் தெருவிலும் இந்தப் போராட்டம் நடந்தது.
இதுதான் ஷரியா
இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய நபர் பேசுகையில், இதுதான் ஷரியாவுக்கான அர்த்தம். இதைத்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் செய்து வருகின்றனர்.
தினசரி இப்படித்தான் நடக்கிறது
இங்கு நாங்கள் நான்கு பெண்களை ஏலம் விடுவது போல நடித்துக் காட்டுகிறோம். ஆனால் சிரியாவிலும், ஈராக்கிலும் நூற்றுக்கணக்கான பெண்களை தீவிரவாதிகள் ஏலம் விடுகின்றனர். செக்ஸ் அடிமைகளாக்குகின்றனர். இதை உங்களுக்கு நாங்கள் விளக்கவே இந்த நாடகம் என்றார்.
முகம் மூடி, சங்கிலியால் பிணைத்து ஏலம்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்களும் செக்ஸ் அடிமைகள் போல நடித்தனர். அவர்களை முகத்தை மூடி, சங்கிலிகளால் பிணைத்திருந்தனர். அவர்களை ஏலத்தில் எடுக்குமாறும் அறைகூவல் விடுத்தனர் போராட்டக்காரர்கள்.
எந்தப் பெண் வேண்டும்
அந்தப் போராட்டக் குழுத் தலைவர் மேலும் கூறுகையில், இங்கே கிறிஸ்தவப் பெண் இருக்கிறார், முஸ்லீம் பெண் இருக்கிறார், கொபேன் பெண் இருக்கிறா், ரக்கா, மொசூல் பெண்கள் உள்ளனர். உங்களுக்கேற்ற பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்.
14 வயது சிறுமி
போராட்டத்தில் பங்கேற்ற 14 வயதான ஒரு சிறுமியைக் காட்டிய போராட்டக் குழுத் தலைவர், இவர் சுத்தமானவர், கன்னிப் பெண் என்றும் கூறி ஏலம் நடத்தியபோது அதை வேடிக்கை பார்க்க வந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இங்கும் நடக்கலாம்
இந்தப் போராட்டம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போராட்டக்காரர் கூறுகையில், இது சிரியாவிலும், ஈராக்கிலும் தினசரி நடக்கிறது. ஏன் லண்டனிலும் கூட இது நடக்கும் காலம் நெருங்கி வருகிறது. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்றார்.
போராட்டத்திற்கு எதிர்ப்பு
ஆனார் குர்து ஆதரவாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு பார்வையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸார் தலையிட்டுத் தடுத்தனர்.