குவைத்தில் 43 இந்தியர்கள் பலி.. அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? ஷாக் தகவல்
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தம் 49 பேர் வரை பலியாகி உள்ளனர். இதில் 43 பேர் இந்தியர்கள் என சொல்லப்படும் நிலையில் அந்த கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக அரபு நாடுகளில் தங்கி ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றன. அந்த வரிசையில் குவைத் நாட்டிலும் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். கட்டட வேலை உள்பட பல்வேறு நிறுவனங்கள் சார்ந்த பணிகளை அங்கு இந்தியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தெற்கு குவைத்தின் அகமதி கவர்னரேட்டுக்கு உட்பட்ட மங்காப் நகரில் இந்தியர்கள் அதிகம் உள்ளன. இங்கு என்டிபிசி என்ற நிறுவனம் சார்பில் பணிக்கு எடுக்கப்பட்ட இந்தியர்கள் அங்குள்ள 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த அடுக்குடிமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தம் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50 பேர் வரை காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளன. இந்த தீவிபத்தில் பலியான 49 பேரில் 43 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இதில் அதிகமானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தீவிபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு இறந்தவர்களின் உடல்களை இந்திய விமானப்படை விமானத்தில் இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த குவைத் தீ விபத்து இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் குவைத் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தீவிபத்து ஏற்பட்ட குடியிருப்பு மொத்தம் 6 மாடிகளை கொண்டது. இதில் இந்தியர்கள் உள்பட 195 பேர் வரை தங்கியிருந்துள்ளனர். இரவு பணியின் காரணமாக 20 பேர் அங்குள்ள அறையில் இல்லை.
இத்தகைய சூழலில் தான் அதிகாலை 4.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 4ன் தரைதளத்தில் எகிப்து செக்யூரிட்டி கார்டின் குடியிருப்பில் உள்ள சமையலறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தரைதளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் இந்த தீ வேகமாக பிற கட்டடங்களுக்கும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் பல தொழிலாளர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
இதனால் அவர்களால் தீவிபத்து பற்றி உடனடியாக அறிய முடியவில்லை. ஆனாலும் தீ மற்றும் கரும்புகையால் அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கண்விழித்து தப்ப முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் அவர்களால் கட்டடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த வேளையில் பலர் மொட்டைமாடிக்கு ஓடிய நிலையில், சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர்.
ஆனாலும் பலர் கட்டத்துக்குள்ளேயே சிக்கினர். இதனால் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளனர். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் 49 பேர் பலியாக முக்கிய காரணம் இதுதான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications