அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு- எம்.பிக்கள் கோரிக்கை
நியூயார்க்: இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா வரும்போது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அவருக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பிக்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை கடிதம் அளித்துள்ளனர்.
குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது அம்மாநில முதல்வராக பதவிவகித்த நரேந்திரமோடி, விரைந்து நடவடிக்கை எடுத்து கலவரம் பரவாமல் தடுக்க தவறிவிட்டதாக கூறி, அவருக்கு அமெரிக்க அரசு, தனது நாட்டுக்குவர விசா மறுத்து வந்தது. இந்நிலையில் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராக பதவிக்கு வந்துள்ள நிலையில், தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. மோடிக்கு அமெரிக்க விசா வழங்க தயார் என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு மோடி எப்போது பயணிப்பார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதே நேரம், செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுபேரவை கூட்டத்தில் பங்கேற்க மோடி அமெரிக்கா செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எட்ரோய்ஸ் மற்றும் ஜார்ஜ் ஆகிய இரு மூத்த எம்.பிக்கள், நாடாளுமன்ற சபாநாயகரை சந்தித்து ஒரு கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளனர். அதில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"தாங்களே அறிந்துள்ளபடி, அமெரிக்காவுக்கான முக்கியமான கூட்டுறவு நாடு இந்தியா. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விவகாரங்களில் தெற்காசிய நாடுகளிலேயே, இந்தியாவைவிட, அமெரிக்காவுக்கு வேறு எந்த நாடும் முக்கியமானதாக இருக்க முடியாது. 21வது நூற்றாண்டின் தலைசிறந்த நட்புநாடுகளாக அமெரிக்காவும்-இந்தியாவும் விளங்கப்போவதாக கூறினாலும் அது மிகையில்லை.
500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் நரேந்திரமோடி அமோக வெற்றி பெற்று பிரதமராகியுள்ளார். இந்தியாவில் இது வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாற்றமாகும்.
மோடி, குஜராத்தின் முதல்வராக திறம்பட நிர்வாகம் செய்தவர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதம் மட்டுமே கொண்ட குஜராத், இந்தியாவின் ஏற்றுமதியில் 25 சதவீத பங்கு வகிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் குஜராத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மோடி பிரதமராகியதன் மூலமாக, இந்தியாவும், வர்த்தகத்தில் தலைசிறந்த நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளது" என்று சபாநாயகருக்கு அளித்த கடிதத்தில் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications