பிரான்ஸில் போதனை செய்ய இமாம்களுக்கு லைசென்ஸ்: முன்னணி முஸ்லீம் அமைப்பு அறிவிப்பு
பாரீஸ்: பிரான்ஸில் போதனை செய்ய இமாம்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று முன்னணி முஸ்லீம் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் போதனை செய்ய இமாம்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று முன்னணி முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் மதத்திற்கான பிரெஞ்சு கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அனூவர் பிபெச் கூறுகையில்,

நாட்டில் உள்ள இமாம்களுக்கு ஓட்டுநர் உரிமம் போன்று ஒரு உரிமம் வழங்க வேண்டும். இமாம்கள் இஸ்லாம் பற்றி போதனை செய்ய அனுமதிக்கும் வகையில் உரிமம் வழங்க வேண்டும். இமாம்களின் கல்வி ஞானத்தை சோதனை செய்த பிறகு அவர்கள் நாட்டின் சட்டங்களை மதிப்பதாக ஒப்புக் கொண்ட பிறகு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
ஒரு இமாமிடம் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திருப்பிப் பெற்றால் அவர் போதனை செய்யக் கூடாது என்று இல்லை. அதன் பிறகு அவர் என்ன கூறினாலும் அவர் எந்த பள்ளிவாசலுக்காக பணிபுரிகிறாரோ அது தான் பொறுப்பு ஆகும்.
தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்களை பிரான்ஸில் வசிக்கும் முஸ்லீம்கள் ஒரு நாளும் ஆதரிக்க மாட்டார்கள். தீவிரவாதிகளின் மதம் சார்ந்த விவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வெறுப்பை போதிப்பவர்களை தடுத்து நிறுத்த அரசு அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கும் என்று பிரான்ஸ் உள்நாட்டு துறை அமைச்சர் பெர்னார்ட் காசினூவ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இஸ்லாத்தின் பெயரால் மக்களிடையே வெறுப்பை போதிக்கும் நபர்களால் தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்று அஞ்சப்படும் வேளையில் அனூவர் உரிமம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications