ஐ.எஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியின் மனைவி,மகன் லெபனானில் கைது!!
பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கல் அல் பக்தாதியின் மனைவி மற்றும் மகனை லெபனான் ராணுவம் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் 'இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்துள்ளது. இதன் கலிபாவாக (தலைவராக) அபுபக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது கட்டளைக்கு அனைத்து இஸ்லாமியர்களும் கட்டுப்பட வேண்டும் என்றும் ஐ.எஸ். இயக்கம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தினரை மேலும் முன்னேற விடாமல் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கூட்டு வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. அண்மையில் இந்த தாக்குதலில் அபுபக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டதாவும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனிடையே லெபனானில் அபுபக்கர் பக்தாதியின் மனைவிகளில் ஒருவரும் மகன் ஒருவரும் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லெபனான் எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அப்போது சிரியாவில் இருந்து லெபனானுக்குள் ஊடுருவியபோது இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த போலி பாஸ்போர்ட்டுகளையும் லெபனான் ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.
இருப்பினும் அபுபக்கர் பக்தாதியின் எந்த மனைவி கைது செய்யப்பட்டார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவரது மகன் பெயர் என்ன? என்பது போன்ற விவரங்களை வெளியிட லெபனான் ராணுவ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.