பையில் ரூ. 2 லட்சம்... வங்கியில் ரூ. 7 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!
லெபனானில் பிச்சைக்கார பாட்டி ஒருவரின் வங்கிக் கணக்கில், இந்திய மதிப்பில் ரூ. 7 கோடி பணம் இருந்தது தெரியவந்துள்ளது.
பெய்ரூட்: லெபனானில் சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பாட்டியின் பையில் ரூ. 2 லட்சமும், அவரது வங்கிச் சேமிப்பில் ரூ. 7 கோடியும் இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பாத்திமா என்ற 54 வயது மூதாட்டி ஒருவர் பிச்சையெடுத்து வந்தார். கால்களை இழந்த மாற்றுத் திறனாளியான இவருக்கு அப்பகுதியில் செல்வோர் தங்களால் இயன்ற பண உதவிகளைச் செய்வது வழக்கம்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாத்திமா உயிரிழந்தார். உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது உடல் சாலையோரம் நின்றிருந்த பழைய கார் ஒன்றில் அனாதையாக கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பாத்திமாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த பாத்திமாவின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர்.
அதில், பாத்திமாவின் உறவினர்கள் குறித்த ஏதேனும் தகவல்கள் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக அவரது பையில் இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இருந்தது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதோடு, பாத்திமாவின் வங்கிக் கணக்குப் புத்தகமும் அங்கிருந்தது. அதனை போலீசார் ஆய்வு செய்ததில், அதில் இந்திய மதிப்பில் ஏழரை கோடி ரூபாய் சேமிப்பாக இருந்தது தெரிய வந்தது.
ஆதரவற்று அனாதையாக இறந்து கிடந்த பிச்சைக்கார மூதாட்டி இவ்வளவு பணம் சேமித்து வைத்திருந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.