பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சியின் தில்மா ரூசெஃப் மீண்டும் வெற்றி!
சாவ்பாவ்லோ: பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபரான இடதுசாரிக் கட்சியின் தில்மா ரூசெஃப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் 90 சதவீத வாக்குகள் எண்ணப் பட்டுள்ள நிலையில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தில்மா ரூசெஃப் 51.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரேசிலியன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஏசியோ நெவல் 48.5 சதவீத வாக்குகள் பெற்றார்.

பிரேசில் ஜனநாயகப் பாதைக்கு கடந்த 1985-ம் ஆண்டு திரும்பியது. 1995-ம் ஆண்டு முதல் இடதுசாரிகளான தொழிலாளர் கட்சிக்கும், பிரேசலியன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு மட்டுமே போட்டி இருந்து வருகிறது.
தொழிலாளர் கட்சி கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. இக்காலகட்டத்தில் மேற் கொண்ட நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் வறுமையிலிருந்து மீண்டு நடுத்தர வர்க்கத்தினராக மேம்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி பிரேசில் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது போட்டியிட்ட 3 வேட்பாளர்களுக்கும் குறைந்த சதவீத வாக்குகளே கிடைத்தன. வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்கு யாருக்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து 2-வது மற்றும் இறுதிச் சுற்று தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் தற்போதைய ஜனாதிபதியும், தொழிலாளர் கட்சியின் வேட்பாளருமான தில்மா ரூசெஃப்பிற்கும், சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஆசியோ நெவஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனேயே எண்ணப்பட்டன. தில்மா 51.6 சதவீத வாக்குகளையும் அசியோ நெவஸ் 48.4 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் நாட்டில் தொடர்ந்து 4-வது முறையாக தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூசெஃப், பிரேசில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பார்.
இடதுசாரியான தில்மா வெல்ல மாட்டார் என்று பெரும் தொழில்நிறுவனங்கள் சூதாட்டமே நடத்தி பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் தில்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications