உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரங்கள்- ஆய்வில் சுவாரசியம்
லண்டன்: உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நகரமாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த பேங்காங்கை பின்னுக்கு தள்ளிவிட்டு லண்டன் இந்த மகுடத்தை சூட்டிக்கொண்டுள்ளது. மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை கூடுகிறது
சென்ற ஆண்டில் லண்டனுக்கு 18.69 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டைவிட நடப்பாண்டில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போன வருடம் பாங்காங் முதலிடம்
மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் அமைப்பு, உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் 132 இடங்களை பட்டியலிட்டு அதில் முதலிடத்தை லண்டனுக்கு அளித்துள்ளது. கடந்தாண்டு இந்த பட்டியலில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் முதலிடம் பிடித்திருந்தது.
லண்டன் வளருகிறது
கடந்தாண்டை ஒப்பிட்டால் 8 சதவீத வளர்ச்சியை பெற்ற லண்டன், இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
பாங்காங் தேய்கிறது
அதே நேரம் பாங்காங்கிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. தாய்லாந்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்றதன்மை இந்த வீழ்ச்சிக்கு காரணம்.
சிங்கப்பூருக்கு 4, துபாய்க்கு 5
இந்தாண்டு ஆய்வில், லண்டனுக்கு அடுத்த இடத்தை பாங்காங் பிடித்துள்ளது. 15.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பாரீஸ், 3ம் இடமும், சிங்கப்பூர் 12.7 மில்லியன் சுற்றுலா பயணிகளுடன் நான்காம் இடமும் பிடித்துள்ளன. துபாய்க்கு 11.95 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் இப்பட்டியலில் அது 5வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நாடுகளும் உள்ளன
இதற்கடுத்தபடியாக நியூயார்க், இஸ்தான்புல், கோலாலம்பூர், ஹாங்காங், சியோல் போன்ற நகரங்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நகர பட்டியலில் உள்ளன.