லண்டன் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் இளைஞர்... அதிர்ச்சித் தகவல்கள்
லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: லண்டன் மாநகர பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று, அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து, தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதில், ஒரு தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என, அடையாளம் தெரியவந்துள்ளது. இதுபற்றி தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், லண்டன் தீவிரவாத சம்பவத்தில் தொடர்புடைய ஒரு தீவிரவாதியின் பெயர் அபிஸ் என்றும், அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது. அவனது வயது 27 எனவும், சேனல் 4 டிவி தயாரித்த ஜிகாதிகள் பற்றிய ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தான் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தி சன் கூறியுள்ளது.
இவன் எந்நேரமும், யூ டியுப் இணையதளத்தில் பதிவேற்றப்படும் மத தீவிரவாத வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். இதனாலேயே, தீவிரவாதிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு, இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக, அபிஸின் நண்பர்களில் ஒருவன், லண்டன் போலீசாரை தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்துள்ளதாகவும், தி சன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஐஸ் அமைப்பு லண்டன் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று இருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications