லண்டன் தீ விபத்தில் 30 பேர் பலி- அடையாளம் தெரியாமல் கருகிய மக்கள்- கண்ணீர் அஞ்சலி
லண்டன் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பலரது உடல் அடையாமல் தெரியாமல் கருகியுள்ளது.
லண்டன்: லண்டனில் 24 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. பலரின் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகிப் போயுள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு லண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. 24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் உள்ள 120 குடியிருப்புகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பல மாடியில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் முதற்கட்ட நிலவரப்படி 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்து இருந்தது.
உயிர் பலி அதிகரிப்பு
இந்நிலையில், கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 12 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விதிமீறல் புகார்
1974ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடம் கடந்த ஆண்டு ரூ.90 கோடி மதிப்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை வசதிகள் குறித்து ஏற்கனவே லண்டன் பத்திரிக்கைகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
3 நாட்களாக எரிந்த கட்டிடம்
புதன்கிழமை எரியத் தொடங்கிய இந்த கட்டிடம் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வந்தது. காரணம் வீடுகள் அனைத்தும் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததுதான். வெள்ளிக்கிழமை மாலைதான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
வெளியேற உத்தரவு
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை சாம்பல் படிந்து காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் இந்த கட்டிடத்தைச் சுற்றி உள்ள பகுதியில் வசிப்பவர்கள் உடனடி யாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். கட்டிடம் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.
கண்ணீர் அஞ்சலி
இந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்ட போது, இங்கு தீ விபத்து ஏற்படு வதற்கு வாய்ப்பு இருப்பதாக எச்ச ரிக்கை விடுத்ததாகவும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கிரென்ஃபெல் செயல்பாட்டுக் குழு குற்றம்சாட்டி உள்ளது. இதனிடையே, லண்டன் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நகரவாசிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்