"செயின் ஜெயபாலா" நீங்க.. இதைப் பார்த்தாவது சிகரெட்டை கீழே போட்ருங்கப்பா.. புண்ணியமா போகும்!
சிகரெட் பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு குறித்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்
பெய்ஜிங்: என்ன கொடுமை பாருங்க.. பார்க்கும்போதே மனசெல்லாம் பதறுது. 30 வருடமாக சிகரெட் பிடித்து வந்த ஒருவரது நுரையீரல் அப்படியே கருப்புக் கலரில் மாறி போயிருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
சீனாவில் தான் இந்த சம்பவம். அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், அவருக்கு வயது 52. கடந்த 30 வருடமாக செயின் ஸ்மோக்கராக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் இறந்து விட்டார். மரணத்திற்கு முன்பு தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து இவரது உடலை மருத்துவமனைக்குக் கொடுத்து விட்டனர். அங்கு வைத்து இவரது முக்கிய உடல் உறுப்புகளை எடுத்துள்ளனர். அப்போது நுரையீரலையும் எடுத்துள்ளனர். அதைப் பார்த்த டாக்டர்கள் அப்படியே அதிர்ச்சியாகி விட்டனர். காரணம், அந்த நபரின் நுரையீரல் அடர்ந்த கருப்புக் கலரில் இருந்ததுதான்.
இந்த மனிதர், உயிருடன் இருந்த காலத்தில் பாக்கெட் பாக்கெட்டாக தினசரி ஊதித் தள்ளுவாராம். இந்த சிகரெட் புகைதான் இவரது நுரையீரலை இந்த அளவுக்கு மோசமாக்கி வைத்துள்ளது.
இந்த அடர் கருப்பு நிற நுரையீரலை வெளியே எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்தாவது இந்த "செயின் ஸ்மோக்கிங் ஜெயபால்கள்" திருந்துவார்களா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை இதுவரை 25 மில்லியன் முறை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் சென் ஜிங்யூ என்பவர் கூறுகையில், தொடர்ந்து சிகரெட் பிடித்தால் நுரையீரல் இப்படித்தான் மாறி விடும். இது மிகவும் அபாயகரமான அளவிலான பாதிப்பை சந்தித்துள்ள நுரையீரல். இதுபோன்ற நுரையீரலை யாருக்கும் பொருத்த முடியாது.
நீங்கள் செயின் ஸ்மோக்கராக இருந்தால் உங்களது நுரையீரல்கள் உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே பயன்படாது. எனவே அதை தானமாகவும் தர முடியாது. புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.. அதுதான் உங்களது நுரையீரலுக்கும் நல்லது என்று கூறியுள்ளார்.
இதை பார்த்தாவது சிகரெட்டை கீழே போட்ருங்கப்பா.. புண்ணியமா போகும்.












Click it and Unblock the Notifications