மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
டர்பன்: மோசடி வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 வருட சிறை தண்டனை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம்.
Recommended Video
மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் ஊர் அறிந்த மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். 2015ம் ஆண்டில் இவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்று டர்பன் நீதிமன்றத்தில் தொடங்கியது. தேசிய வழக்குரைஞர் ஆணையத்தின் (என்.பி.ஏ) பிரிகேடியர் ஹங்வானி முலாட்ஸி எதிர் தரப்பில் ஆஜராகி வாதிட்டார். இதில் நேற்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக பொய் தகவல் கூறி, போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை வழங்கியுள்ளார் ராம்கோபின்.
இலவச வேக்சின் என்றால்.. தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்?.. ராகுல் காந்தி பொளேர்!
தொழிலதிபருடன் சந்திப்பு
வழக்கு ஆரம்பித்தபோது, லதா ராம்கோபின் 50,000 ரேண்ட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் நிறுவன இயக்குனரான தொழிலதிபர் மகாராஜை 2015ல் ராம்கோபின் சந்தித்தது உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிறுவனம் ஆடை, கைத்தறி மற்றும் பாதணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. மகாராஜின் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு "லாபத்தில் பங்கு" அடிப்படையில் நிதியையும் வழங்குகிறது.
சரக்குகள் வந்திருப்பதாக பொய் தகவல்
இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தனக்கு சரக்குகள் வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை உள்ளே எடுக்க வேண்டுமானால் அவசரமாக பணம் தேவை என்றும் ராம்கோபின் மகாராஜை அணுகி கூறியுள்ளார்.
போலி இன்வாய்ஸ்
இதற்காக, மகாராஜிடம் 6 மில்லியன் அளவுக்கு பணம் கேட்டுள்ளார் ராம்கோபின். ஆனால் இதற்கு ஆதாரம் வேண்டுமல்லவா, அதனால், இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் காண்பித்துள்ளார். இந்த ஆவணங்கள் மற்றும் காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால் மகாராஜும் நம்பிவிட்டார்.
7 வருடம் சிறை
இதையடுத்து மகாராஜ் தரப்பில் ராம்கோபினுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து, குற்றவியல் வழக்கு தொடர்ந்தார் மகாராஜ். இந்த வழக்கில்தான் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பவர். அங்கு அவர் தன்னை "சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசியல் நலன்களை மையமாகக் கொண்ட ஒரு ஆர்வலர்" என்று கூறிக் கொள்வது வழக்கம்.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட காந்தி
தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதியன்று டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு செல்வதற்காக முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தார் காந்தி. அந்த பெட்டியில் வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி, மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அதன்பிறகுதான் பிரிட்டிஷாரின் இனவெறியை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை தென் ஆப்பிரிக்காவிலும், பிறகு இந்தியாவிலும் காந்தியடிகள் தீவிரமாக நடத்தினார். ஆனால் அதே டர்பன் நகரில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மோசடி வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். காலம்தான் எத்தனை விசித்திரமானது இல்லையா!