மலேசியன் ஏர்லைன்ஸின் 'அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' போட்டி: திட்டித் தீர்த்த மக்கள்
கோலாலம்பூர்: ஆன்லைன் போட்டி ஒன்றுக்கு வைத்த பெயரை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் எம்.ஹெச். 370 கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமானது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் அதில் இருந்த 298 பேர் பலியாகினர்.
இந்த சம்பவங்களை அடுத்து மலேசியன் ஏர்லைனிஸின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
போட்டி
தனது வியாபாரத்தை பெருக்க மலேசியன் ஏர்லைன்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒரு ஆன்லைன் போட்டியை அறிவித்தது.
பக்கெட் லிஸ்ட்
பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் தான் வாழ்நாளில் செய்ய, பார்க்க விரும்புவது ஆகும். இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் தான் அறிவித்த போட்டிக்கு என்னுடைய இறுதியான பக்கெட் லிஸ்ட் என்று பெயரிட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் 16 பேருக்கு ஐபேட் அல்லது மலேசியாவுக்கு திரும்பி வரும் டிக்கெட் அளிக்கப்படும் என்று அறிவித்தது.
திட்டு
மலேசியன் ஏர்லைன்ஸ் போட்டியின் தலைப்பை பார்த்த பலர் இப்படியா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தலைப்பு வைப்பது என்று திட்டித் தீ்ர்த்தனர்.
நீக்கம்
பலரும் திட்டியதை அடுத்து பக்கெட் லிஸ்ட் போட்டி லிங்க் மலேசியன் ஏர்லைன்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செய்ய விரும்பும் பட்டியலை தெரிவியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வேலை
வியாபாரம் மந்தமாகிவிட்ட நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களில் 30 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.