நிர்வாண ஆட்டத்தால் நிலநடுக்கம்.. இங்கிலாந்துப் பெண் மலேசியாவில் கைது.. 10 எருமை கொடுத்தால் விடுதலை!
கோலாலம்பூர்: மலேசிய மக்கள் புனிதமாக கருதும் கினபாலு மலைப் பகுதியில் நிர்வாண ஆட்டம் போட்டு கொண்டாடியதால் மலை சினம் கொண்டு, அதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உள்பட சிலரை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கினபாலு மலைப்ப குதியில் மே 30ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்திற்கு 16 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு நிர்வாண ஆட்டம் போட்டு கேளிக்கைகளை நடத்தியதே காரணம் என சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் மலேசிய மக்கள், அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்ட் போட ஆரம்பித்தனர்.
இதையடுத்து 24 வயதான இருக்கக் கூடிய இங்கிலாந்து இளம் பெண் எலியனார் ஹாக்கின்ஸ், 2 கனடா நாட்டு சகோதரர்கள், ஒரு டச்சுப் பெண் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த மலைப் பகுதியில் மேலாடை இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதிலும் இங்கிலாந்துப் பெண் நிர்வாணமாகவும் ஆடியுள்ளார்.
இதுகுறித்து சரவாக் துணை முதல்வர் டான் ஸ்ரீ ஆல்பிரட் ஜபு கூறுகையில், அப்பகுதி பூர்வீக மக்கள், இந்த வெளிநாட்டினரின் செயல் காரணமாக மலை பாதிக்கபப்ட்டு, சினம் கொண்டதாகவும், அதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கருதுகிறார்கள். இதுதொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்தே தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
தவா விமான நிலையத்தில் வைத்து இங்கிலாந்துப் பெண் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் அவர்களாகவே சரணடைந்தனராம்.
கைதான அனைவரையும் நான்கு நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் "குற்றம்" இழைத்தது நிரூபணமானால், அதிகபட்சம் 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுமாம்.
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னத்தில் ஒன்றான கினபாலு மலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மத, கலாச்சார நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சரவாக் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 எருமையைக் கொடுத்தால் விடுதலை
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் பழங்குடியினத் தலைவர் திண்டரமா அமன் சீராம் சிம்புனா என்பவர் நேரில் போய்ப் பார்த்தார். அவர்களிடம், எங்களுக்கு 10 எருமை மாடுகளை நீங்கள் அபராதமாக தர வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இல்லாவிட்டால் 3 மாதம் சிறையில் இருக்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.
அந்த பத்து எருமை மாடுகளும் ஒன்று ஆணாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications