8 ஆண்டுகளில் 5 வது பிரதமர்.. ஆஸி. புதிய பிரதமராக மார்கம் டர்ன்புல் பதவியேற்றார்!
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த டோனி அப்பாட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் 29வது பிரதமராக மார்கம் டர்ன்புல் இன்று பதவியேற்றார்.
ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த டோனி அப்பாட் பதவி அரசு மீது அதிருப்தி நிலவியது. கடந்த 2 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகளும் அவருக்கு எதிராகவே அமைந்தன.

பொருளாதார ரீதியாக நாட்டை அவர் முன்னேற்ற தவறி விட்டார் என்பது அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற தொலைத் தொடர்பு அமைச்சரான மால்கம் டர்ன்புல்லின் குற்றச்சாட்டு.
இதையடுத்து இருவரில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிய ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கான்பெரா நகரில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் டோனி அப்பாட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும் டர்ன்புல்லுக்கு ஆதரவாக 54 வாக்குகளும் கிடைத்தன.
இதனால் பிரதமர் பதவியை அப்பாட் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இதைத் தொடர்ந்து மால்கம் டர்ன்புல் நாட்டின் 29-வது பிரதமராக பதவி ஏற்றார்.
கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ், மால்கம் டர்ன்புல்லுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது டர்ன்புல் பேசியதாவது:
இது நான் எதிர்பாராதது. இந்த நாட்டுக்கு தலைமையேற்று நாம் இன்று சந்தித்துவரும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு, தனிநபர் மற்றும் வர்த்தக சுதந்திரத்துடனும், தெளிவான பொருளாதார சீர்திருத்த பாதையிலும் நாட்டை வழிநடத்திச் செல்வதில் எனது கடமையை நிறைவேற்றுவேன். இதற்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். நாடாளுமன்றம் தனது முழு ஆயுட்காலத்தையும் நிறைவு செய்யும்; நிச்சயமாக முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலை நடத்தமாட்டோம்.
இவ்வாறு டர்ன்புல் பேசினார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications