மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு!
மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்தால் மேலும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாலே: மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்தால் அங்கு அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும்கட்சியினர் அளித்த வாக்குகளை அடுத்து அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முகமது நசீத் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அதிபராக அப்துல்லா யாமீன் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலைச் சதி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் தொடரப்பட்டதால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உடல்நலக் குறைவால் மருத்துவ வசதிகளுக்காக மாலத்தீவை விட்டு வெளியேறிவிட்டார் நசீத். லண்டனில் சில காலம் தங்கியிருந்த நசீத், தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நசீத் உட்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 9 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.

யாமீன் அரசுக்கு நெருக்கடி
இதற்கிடையில், அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12 எம்.பி.க்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால் அதிபர் யாமீன் அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆட்சியை தக்க வைக்க யாமீன் முயற்சி
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 85 உறுப்பினர்களில் 12 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்பட்டால், அதிபர் யாமீன் பெரும்பான்மை இழப்பார் என்ற நிலை உள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைத்து விடும். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். மேலும், உத்தரவைத் திரும்ப பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் உத்தரவிட்டார். ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

மாலத்தீவு அரசில் பரபரப்பு
இதையடுத்து அதிபர் யாமீனைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது கைது செய்யவோ உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என்று பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி. க்களும் அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேரும் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 5ம் தேதி முதல் மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

38 எம்பிகள் ஆதரவாக ஓட்டு
இந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த போதும், ஆளும் கட்சியின் 38 எம்.பி.க்களும் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனால் அவசர நிலை பிரகடனமானது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications