"தயவு செய்து வாங்க.." இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் வைத்த கோரிக்கை.. பொருளாதாரமே ஆடி போச்சு
மாலே: இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவைப் புறக்கணிக்கும் நிலையில் இதனால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாலத்தீவு அமைச்சர் இந்தியர்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலத்தீவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முய்சு வென்றது முதலே இந்தியா மாலத்தீவு உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியா குறித்து அவ்வப்போது மாலத்தீவு அதிபர் முய்சு சில சர்ச்சை கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

மாலத்தீவு: இரு தரப்பு உறவு இந்தளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாவையே பிரதானமாக நம்பியிருக்கும் மாலத்தீவு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுடன் தங்கள் நாடு நீண்ட உறவைக் கொண்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்று பிணைப்பு இருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்புச் சூழலையே மேம்படுத்த விரும்புகிறோம்.
இன்னும் 5 நாள் தான் இருக்கு.. இந்திய ராணுவம் மொத்தமாக கிளம்பிவிடும்.. மாலத்தீவு பரபர
தயவு செய்து வாங்க: மாலத்தீவு அரசும் மாலத்தீவு மக்களும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் அன்புடன் வரவேற்கும்.. இந்தியர்கள் தயவு செய்து மாலத்தீவு நாட்டிற்குச் சுற்றுலாவுக்கு வாருங்கள்.. மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சராக எனது கோரிக்கை இதுதான். ஏனென்றால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது" என்றார்.
பின்னணி என்ன: பிரதமர் மோடி கடந்த ஜன. 6ஆம் தேதி லட்சத்தீவு சென்ற படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அப்போது முய்சு அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி குறித்து மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்தனர். இது சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரபலங்கள் தொடங்கிப் பல ஆயிரம் இந்தியர்கள் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.
ரத்து செய்த பயணிகள்: இந்தியர்கள் சும்மா சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கு மட்டும் சொல்லவில்லை. பலரும் நிஜமாகவே தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டனர். இதன் காரணமாகவே மாலத்தீவுக்கு செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் லிஸ்டில் இந்தியா டாப் இடத்தில் இருந்து 6ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தாண்டு முதல் நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து மாலத்தீவு சென்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சுமார் 42% குறைந்துள்ளதுள்ளது.

கடந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து 73,785 சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவு சென்றிருந்தனர். ஆனால், இந்தாண்டு அதே காலகட்டத்தில் வெறும் 42,638 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே சென்றுள்ளனர். இந்தாண்டு மே 4ஆம் தேதி வரை 43,991 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகமது முய்சு: கடந்த ஆண்டு நவம்பரில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதுவே இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறையக் காரணமாக இருக்கிறது.
கடந்த நவ. மாதம் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு வென்றார். அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். குறிப்பாக மாலத்தீவில் உள்ள நோயாளிகளுக்கு உதவ இந்தியா ஹெலிகாப்டரை கொடுத்து இருந்தது. அதை ஆப்ரேட் செய்யவும் பராமரிக்கவும் இந்திய ராணுவத்தினர் அங்கு இருந்தனர். இருப்பினும், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று முய்சு கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications