மனைவி மீது பொறாமை.. கை, கால்களை வெட்டி விட்டு தற்கொலை செய்த கணவர்!
கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த தமிழ்த் தம்பதிக்குள் ஏற்பட்ட மோதலில், மனைவியின் கைகளையும், கால்களையும் வெட்டி கணவர், விஷம் குடித்துத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
ஜோஹார் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மேனகா. இவர் என்சே பேசர் ஹஜ்ஜா கல்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 44 வயதாகிறது. குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வேலை பார்க்காமல் சும்மா இருந்து வந்தார். மேனகாதான் வேலை பார்த்துக் குடும்பத்தைப் பார்த்து வந்தார்.
மேனகா கடந்த 15 வருடமாக சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மாதம் ஒருமுறை மலேசியா வந்து கணவர், குழந்தைகள், மாமியார் ஆகியோரைப் பார்த்துச் செல்வார்.
சமீப காலமாக மேனகாவின் நடத்தை குறித்து சந்தேகம் அடைந்தார் கணவர். மேலும் மேனகா நன்றாக வேலை பார்த்து சம்பாதிப்பதும், தான் வேலையில்லாமல் இருப்பதையும் நினைத்தும் விரக்தி அடைந்துள்ளார். இதனால் மேனகா ஊருக்கு வரும்போதெல்லாம் சண்டையில் ஈடுபடுவார்.
இந்த விரக்தி மற்றும் கோபத்தில்தான் மனைவியின் கைகளையும் கால்களையும் கொடூரமாக வெட்டி விட்டார் கணவர். கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேனகா தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மனைவியை வெட்டிய பின்னர் மேனகாவின் கணவர் விஷம் குடித்து விட்டு தூக்கிலும் தொங்கி விட்டார். இந்தத் தம்பதிக்கு 19 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேனகாவின் அண்ணன் ரவிச்சந்திரன் கூறுகையில், தற்போது இரு குழந்தைகளும் எங்களது உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளனர். எனது தங்கைக்கு நினைவு இன்னும் திரும்பவில்லை என்றார்.