புதிய வலி நிவாரணி சோதனையில் விபரீதம்... பிரான்சில் மூளைச்சாவால் ஒருவர் பலி!
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிய வலி நிவாரணி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை முதலில் எலி உள்ளிட்ட ஐந்தறிவு உயிரினங்களுக்கு பயன்படுத்திப் பார்ப்பது வழக்கம். அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அவை எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான வலி நிவாரணி மருந்தை மனிதர்கள் 108 பேருக்கு அளித்து சோதனை மேற்கொண்டனர். இவர்களில் 90 பேருக்கு விதவிதமான அளவில் மருந்து அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு குறைந்த அளவிலான மருந்தே தரப்பட்டது. மீதமிருந்தவர்களில் ஆறு பேருக்கு மட்டும் அதிக அளவிலான மருந்து அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது புதிய மருந்து தரப்பட்ட ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. மற்ற 5 பேரும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அந்த மருந்து சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும் குணமடைந்து வருவதாக கூறப்பட்டாலும், அவர்களில் மூவருக்கு சரிப்படுத்த முடியாத பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரென்னெஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications