அமெரிக்காவில் ஆந்திர பொறியாளர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை
தெற்கு கரோலினா: அமெரிக்காவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்தவர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்தும்போது அவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தூர்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பரச்சூரி பாலகோபால்(43). ஆந்திராவில் பி.டெக். படித்த அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் தனது மனைவி சௌஜன்யா, மகள் லிகிதா(12), மகன் சந்துவுடன்(10) வசித்து வந்தார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாவட்டத்தில் உள்ள மிர்டல் பீச் பகுதியில் பாலகோபால் கேஸ் நிலையம் வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சில மர்ம நபர்கள் அங்கு வந்து பாலாகோபாலை துப்பாக்கி முனையில் நிறுத்தி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். பணத்தை எடுத்த பிறகு தப்பியோட முயன்ற கொள்ளையர்களை பாலகோபால் தடுத்து நிறுத்த முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். பாலகோபால் இறந்த தகவல் ஆந்திராவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பாலகோபாலின் பெற்றோர் பால நாகேஸ்வர ராவ் மற்றும் கிருஷ்ண குமாரி விஜயவாடாவில் உள்ள தடிகடப்பாவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் மகளை பார்க்க அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
பாலகோபாலின் உடலை ஆந்திரா கொண்டு வரத் தேவையான நடிவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றது. பாலகோபால் கேஸ் நிலையம் தவிர பலசரக்கு கடையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications