விமானத்தில் வைபை பயன்படுத்தியதற்காக எம்பூட்டு பெரிய பில் வந்திருக்கு பாருங்க இவருக்கு!
சிங்கப்பூர்: விமானத்தில் வைபை வசதியைப் பயன்படுத்திய ஒரு பயணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1,171 டாலர் பில்லை அனுப்பி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விமானத்தை விட்டு இறங்கியதும் அவரிடம் பில்லைக் கொடுத்து கட்டி விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
அந்தப் பயணியின் பெயர் ஜெரிமி கட்சே. இவர் தனது விமான பயணத்தின்போது வைபையைப் பயன்படுத்தி இமெயில் அனுப்பினார், சில டாக்குமென்ட்களை அப்லோட் செய்தார். பிரவுசிங்கும் செய்துள்ளார்.
30 எம்.பி வரை பயன்படுத்த 29.99 டாலர் மட்டுமே கட்டணம் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இவருக்கோ 1171 டாலர் பில்லைப் போட்டுள்ளது ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இதுகுறித்து கட்சே கூறுகையில், "நான் நெட்பிலிக்ஸ் பைத்தியம். ஒரு வேளை இதனால் கூட பில் அதிகமாக வந்திருக்கலாம். அல்லது 1200 டாலர் அளவுக்கு மிகப் பெரிய அறிவுப்பூர்வமான டாக்குமென்ட்டை நான் அப்லோட் செய்ததால் வந்திருக்கலாம்.
ஆனால் கொடுமை என்னவென்றால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இன்டர்நெட் வேகம் மகா மோசமாக இருந்தது. மெதுவாக இருந்தது. எனவே வீடியோக்களை இதில் அப்லோட் செய்ய முடியாது.
எனவே எனக்கு எந்த வசதியும், சவுகரியமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் இவ்வளவு பெரிய பில்லைத் தலையில் கட்டியுள்ளனர்" என்றார் அவர்.
மேலும் டிவிட்டரிலும் இந்த விவகாரத்தைப் போட்டு வறுத்தெடுத்துள்ளார் கட்சே. ஆனால் இதுகுறித்து விசாரிப்பதாக மட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு விளக்கம் அளிக்கவில்லை.