செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் காணாமல் போக காரணம் என்ன? பூமிக்கும் இது நடக்கலாம்!
வாஷிங்டன்: நமது பக்கத்து கிரகமான செவ்வாயில் ஒரு காலத்தில் ஆறுகளும், குளங்களும் இருந்திருந்தன. ஆனால் இப்போது அது இல்லை. அங்கிருந்த நீர் எங்கே போனது? எப்படி காணாமல் போனது? என்கிற கேள்வி நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் மண்டையை குடைந்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான காரணத்தை அவர்கள் விளக்கியுள்ளனர். மட்டுமல்லாது செவ்வாய் கிரகத்தை போல நாளை பூமியிலும் நீர் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் எப்படி காணாமல் போனது என்பது குறித்து கண்டறிய நாசா, 'மாவென்' எனும் செயற்கைக்கோளை அனுப்பியிருந்தது. இந்த செயற்கைக்கோள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்தபோது, 'ஸ்பட்டரிங்' எனப்படும் முறையில்தான் செவ்வாயில் நீர் காணாமல் போனது என்று தெரிய வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்திலிருந்து 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த நீரும் ஆவியாகிவிட்டது. இதற்கு சூரிய ஒளிதான் காரணம். செவ்வாய் பூமியிலிருந்து 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அங்கு சூரிய ஒளி குறைவாகத்தான் இருக்கும். நம்மூரில் மாலை 6 மணிக்கு மேல் எப்படி வெளிச்சம் இருக்குமோ அதே அளவுக்குதான் அங்கும் வெளிச்சம் இருக்கும். அப்படியெனில் சூரிய ஒளி எப்படி அங்கிருக்கும் தண்ணீரை ஆவி ஆக்கியிருக்கும் என கேள்வி எழலாம்.
உண்மையில் சூரிய ஒளி தண்ணீரை ஆவியாக்கவில்லை. ஆனால் இந்த ஒளி செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை அழித்திருக்கிறது. வளிமண்டலம் இருந்தால்தான் காற்றில் ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதம் இருந்தால்தான் தண்ணீர், நீர் வடிவத்தில் இருக்கும்.
அதாவது செவ்வாய் கிரகத்தில் காந்தபுலம் அழிந்த பின்னர், சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது மிக வேகமாக அதன் வளிமண்டலத்தை தாக்கும்போது, வளிமண்டலத்திலிருந்த மூலக்கூறுகள் விண்வெளிக்கு தெரித்தன. பைக் வாட்டர் சர்வீஸ் செய்யும்போது, வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தால் அழுக்குகள் பறப்பதில்லையா? அதுபோலத்தான் இங்கும் நடந்திருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாள் கிடையாது.. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இப்படியே நடக்க, செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் அழிந்துள்ளது.
எனவே அங்கிருந்த நீர் எல்லாம் விண்வெளிக்கு ஆவியாகிவிட்டன. இப்படித்தான் அங்கு நீர் காணாமல் போயிருக்கிறது. பூமிக்கும் இதேபோன்ற ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
குறிப்பாக, பூமியின் காந்த புலம் பாதிக்கப்படும்போது இது நடக்கும். சூரியனிலிருந்து வெளிவரும் புயல் வலுவாக இருப்பின் அது பூமியின் காந்த புலத்தை பாதிக்கும். இதனால் இங்கிருக்கும் நீர் ஆவியாகிவிடும். மட்டுமல்லாது, இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து பூமியின் மையப்பகுதி இறுகி இரும்பு உருண்டையாக மாறலாம். இப்படி நடந்தாலும் காந்த புலன் அழிந்துவிடும்.
செவ்வாய் மற்றும் நம்முடைய நிலவிலும் உட்கரு திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறிவிட்டது. எனவேதான் அங்கு காந்தபுலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications