"தெருவெல்லாம் சடலங்கள்!" நிராயுதபாணிகளை சுட்டுத் தள்ளிய ரஷ்யா? ஆதாரத்துடன் விளாசும் உக்ரைன்
கீவ்: உக்ரைன் நாட்டில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தைக் குறைக்கச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், போர் உயிரிழப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப்.24ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி ஒரு மாதத்திற்கு மேலாக இந்தப் போர் தொடங்கி நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையேயான போர் தொடர்ந்து வந்தது.

உக்ரைன் போர்
இந்தப் போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். அதேபோல பல லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் துருக்கி நாட்டில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி நேட்டோவில் இணையாமல் நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் ஒப்புக்கொண்டது.

புதைக்குழி
அதற்குப் பதிலாக உக்ரைன் நாட்டில் இருக்கும் படைகளைக் குறைக்க ரஷ்ய ராணுவம் ஒப்புக் கொண்டது. இதன்படி உக்ரைனில் இருக்கும் ரஷ்ய வீரர்கள் இப்போது படிப்படியாக வெளியேறி வருகின்றனர். இந்தச் சூழலில் உக்ரைன் தலைவநகர் கீவ்விற்கு வெளியே அமைந்துள்ள புச்சா என்ற பகுதியில் ஒரே புதைகுழியில் கிட்டத்தட்ட 300 பேர் புதைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ரஷ்ய ராணுவத்திடம் இருந்து புச்சா நகரைக் கைப்பற்றிய பின்னர் 280 பேர் புதைக்கப்பட்டதாக மேயர் அனடோலி ஃபெடோருக் தெரிவித்துள்ளார்.

கொடூரமானது
இந்த நிகழ்வு போர் எவ்வளவு கொடூரமானது என்பதை விளக்கும் வகையில் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையான உயிரிழப்புகளில் ஒரு பகுதி தான் என்றும் போர் முடிந்த பின்னரே உயிரிழப்பு குறித்துச் சரியான தகவல்கள் தெரிய வரும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 2ஆம் உலகப் போருக்குப் பின்னால், ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான போராக உக்ரைன் போர் கருதப்படுகிறது.

பெண்கள், குழந்தைகள்
அதேபோல நேற்றைய தினம் இதே புச்சா நகரில் ஒரே சாலையில் 20க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கி இருந்தது. இவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் இல்லை. சாதாரண பொதுமக்கள் ஆவர். இந்த மக்கள் அனைவரும் சுட்டும், பின்னால் இருந்து தாக்கியும் கொல்லப்பட்டதாக மேயர் ஃபெடோருக் கூறினார். இதில் பெண்களும் சில குழந்தைகளும் கூட கொல்லப்பட்டுள்ளதாகவும் சில குடும்பங்கள் அப்படியே ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணி
ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்ட பலர் தாங்கள் நிராயுதபாணி என்பதைக் காட்டும் வகையில் வெள்ளை பேன்டேஜ்களை கட்டி இருந்ததாகவும் அதைத் தாண்டி கூட ரஷ்ய ராணுவம் அவர்களைக் கொன்றுள்ளதாக மேயர் ஃபெடோருக் தெரிவித்தார். மேலும், சிலர் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் நுழைய புச்சாங்கா ஆற்றைக் கடக்கும்போது கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மோசமான பாதிப்பு
ரஷ்யா ராணுவத்தினால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் இவை என்று தெரிவித்த மேயர் ஃபெடோருக். ரஷ்யப் படைகள் உடனான சண்டையின் போது சரியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று கூற முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த ஒரு மாதமாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து புச்சா நகரை உக்ரைன் படைகள் இந்த வாரம் தான் மீண்டும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications