பதன்கோட் தாக்குதல்: ஜெய்ஸ் இ முகம்மது தலைவன் மெளலானா மசூத் அஸார் உள்ளிட்டோர் கைது
இஸ்லாமாபாத்: பதன்கோட் தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார், அவரது சகோதரர்கள் உள்பட 4 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதன்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார், காந்தஹார் விமான கடத்தலில் தொடர்புடைய அவனது சகோதரனான அப்துல் ராப் அஸ்கர் உட்பட நான்கு பேர்தான் காரணம் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றம் சாட்டியிருந்தது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தவர்களுடன் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய டெலிபோன் நம்பர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது.
மேலும் இந்த தாக்குதலுக்கு லாகூரில் சதித் திட்டம் தீட்டியதற்கான ஆதாரமும் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பின்னணியாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தொடர்ந்து வற்புறுத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பதன்கோட் தாக்குதல் குறித்தும், இந்தியா தரப்பில் இருந்து இதுவரை பகிர்ந்து கொண்டுள்ள ஆதாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியா வழங்கியுள்ள ஆவணங்களின் படி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் தங்கள் நாட்டின் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது தாக்குதல் நடத்த யாரும் ஏற்பாடு செய்து தந்தனரா? என்பதை விசாரித்து உண்மையை கண்டறிய பிரதமர் நவாஸ்ஷெரீப் கூட்டு விசாரணைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பவல்பூர், ஜீலம், குஜ்ரன்வாலா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார், அவரது சகோதரர்கள் உள்பட 4 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications