மலேசிய விமானம் எம்.ஹெச். 17 எப்படி வெடித்துச் சிதறியது?: வீடியோ இதோ
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைன் வான்வெளியில் பறந்த மலேசிய விமானத்தை பக் ஏவுகணை வீசித் தாக்கியதால் தான் அது வெடித்துச் சிதறியது என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 298 பேருடன் நெர்தர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் கிழக்கு உக்ரைனில் பறந்து கொண்டிருக்கையில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதால் வெடித்துச் சிதறியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தாக்கியதாக உக்ரைனும், உக்ரைன் தாக்கியதாக ரஷ்யாவும் தெரிவித்து வருகிறது. விமானத்தை ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் தாக்கியிருக்கக்கூடும் என்று நிபுணர்களும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்து தலைமையிலான பன்னாட்டு விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது,
மலேசிய விமானம் உக்ரைனில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டது. பக் ஏவுகணை விமானியின் அறை அருகே விமானத்தின் இடப்பக்கம் தாக்கியது. இதில் விமானத்தின் முன் பகுதி உடைந்தது. விமானம் நடுவானில் உடைந்து சிதறியது. அதில் பெரும் பகுதி ரஷ்ய ஆதரவுப்படையினர் பிடியில் உள்ள இடத்தில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கற்பனை வீடியோவையும் விசாரணை குழு வெளியிட்டுள்ளது.