இழுத்துக் கொண்டிருக்கும் எம்.ஹெச்.17 விசாரணை: சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தும் மலேசியா
கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17-ஐ சுட்டு வீழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்க விரும்புகிறது மலேசியா.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் உக்ரைன் வழியாக செல்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர்.
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை ஏவுகணை வீசித் தாக்கியது என்று ரஷ்யா தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தான் விமானத்தை தாக்கியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விமானம் குறித்து ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விமான விபத்து குறித்து நெதர்லாந்து தலைமையில் சர்வதேச விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த சூழலில் விமானத்தை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்க விரும்புகிறது மலேசியா. விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். விமானத்தில் மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டவர்களும் இருந்தனர்.