மலேசிய விமானத்தை உக்ரைன் ஏவுகணை தான் தாக்கியிருக்கும்: ரஷ்ய நிறுவனம்
மாஸ்கோ: நெதர்லாந்தில் இருந்து கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் ஏவுகணையால் தான் தாக்கப்பட்டது என ரஷ்ய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய போராளிகள் தாக்கியதாக உக்ரைனும், உக்ரைன் தாக்கியதாக ரஷ்யாவும் தெரிவித்து வந்தது.
ரஷ்ய நிறுவனம்
அல்மாஸ் அன்டே என்ற ரஷ்ய ஆயுத தயாரிப்பு நிறுவன சிஇஓ யான் நோவிகோவ் கூறுகையில், மலேசிய விமானத்தை உக்ரைன் தான் சுட்டு வீழ்த்தியிருக்கும் என்றார். பக்-எம்1 சிஸ்டமில் இருந்து 9எம்38எம்1 ஏவுகணை மூலம் மலேசிய விமானம் தாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்
9எம்38எம்1 ஏவுகணை தயாரிப்பை ரஷ்யா கடந்த 1999ம் ஆண்டே நிறுத்திவிட்டது. ஆனால் இது போன்ற ஏவுகணைகள் உக்ரைன் ராணுவத்தில் இன்னும் பயன்பாட்டில் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. 2005ம் ஆண்டில் உக்ரைனிடம் 991 9எம்38எம்1 ரக ஏவுகணைகள் இருந்தன என்று யான் கூறியுள்ளார்.
கிராமம்
மலேசிய விமானம் உக்ரைனில் உள்ள ஜரோஷ்சென்ஸ்கோயே கிராமத்தின் தென் பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்கப்பட்டு ரஷ்ய போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் விழுந்துள்ளது என்று ரஷ்யா கூறுகிறது.
பக் ஏவுகணை
பக் ஏவுகணை லாஞ்சர் சம்பவம் நடப்பதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு தான் ரஷ்ய போராளிகள் பிடியில் உள்ள ஸ்னிஷ்னே நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.