லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி..400 பேர் உயிருடன் மீட்பு..பலர் மாயம்
ரோம் : லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து அகதிகளாக ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடலில் தத்தளித்த 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலர் மாயமானதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சுமார் 600 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து கடத்தல்கார்களின் படகில் கிளம்பியவர்களின் படகு லிபியா அருகே மத்திய தரைக்கடலில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. தகவல் அறிந்த இத்தாலியை சேர்ந்த கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
உயிருடன் 400 பேர் மீட்கப்பட்டுள்ளதால், மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மூழ்கியவர்களைத் தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுபோல் விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. நடப்பாண்டில் மட்டும் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐக் கடந்துவிட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications