திடீரென குலுங்கிய வடகொரியா.. அணு ஆயுத சோதனை தளம் அருகே நிலநடுக்கம்! கொரிய தீபகற்பத்தில் சலசலப்பு
பியாங்யாங்: வடகொரியாவில் அணு ஆயுத சோதனை தளம் அருகே நிலநடுக்கம் பதிவாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா சமீபத்தில்தான் புதிய உலைகளை கட்டி வந்தது. இந்நிலையில் இந்த நிலநடுக்கம் கொரிய தீபகற்பம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க நாடாக இருந்தாலும், அதனை வடகொரிய அசலாட்டாக எதிர்த்து வருகிறது. இதற்கு காரணம் வடகொரியாவிடம் இருக்கும் ஆயுதங்கள்தான். அமெரிக்காவிடம் இல்லாத ஆயுதங்களை கூட வடகொரியா தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த ஆயுதங்கள் நேரடியாக அமெரிக்காவை தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அமெரிக்கா, ஜப்பானையும், தென் கொரியாவையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு வடகொரியாவை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.

இருப்பினும், தற்போது வடகொரியா சில அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது, அணு ஆயுத தடவாளத்தில் புதிய உலையை தயார் செய்து வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றாலும், கூடவே அணு ஆயுதங்களுக்கு தேவையான புளூட்டோனியத்தையும் தயாரிக்க முடியும். இதுதான் அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. எனவே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து தென்கொரிய அதிகாரிகள் கூறுகையில், "வட கொரியா நீண்ட காலமாக யோங்பியோனில் உள்ள 5 மெகாவாட் அணுஉலையில் இருந்து ஆயுத தர புளூட்டோனியத்தை தயாரித்து வருகிறது. மின்சார உற்பத்திக்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருவதாக வடகொரியா கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய இலகு-நீர் உலையை அது நிறுவியுள்ளது. இந்த ஆலை வரும் ஏப்ரல்-மே மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் இலகு-நீர் உலைகளை கொண்டு அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
ஆனால், இதிலிருந்து பெறப்படும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்துடன் புளூட்டோனியம் அணு ஆயுதங்களுக்கு சிறந்த எரிபொருள் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. ஏற்கெனவே பல்வேறு புதிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இப்படி இருக்கையில் அணு ஆயுதங்களை வடகொரியா தயாரிக்காது? என்பதை எப்படி நம்ப முடியும்?" என தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்சிக் கூறியுள்ளார்.
இந்த பதற்றங்கள் ஒருபுறம் இருக்க தற்போது மற்றொரு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, வடகொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. வடகொரியாவின் 'புங்கியே-ரி' அணு ஆயுத சோதனை தளம் அமைந்துள்ள 'கில்ஜு' பகுதியிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 2.4 என பதிவாகியுள்ளதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இரவு 7:00 மணிக்கு (1000 GMT) 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரிய சேதங்கள் ஏதும் இல்லை என்றாலும் கூட கொரி தீபகற்பம் முழுவதும் அச்சம் மேலெழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications