பற்றி எரியும் கனடா.. பக்கத்திலேயே மூச்சுமுட்டும் அமெரிக்கா.. "பறந்த வார்னிங்!" என்ன தான் நடக்கிறது
ஓட்டாவா: கனடா நாட்டில் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், N95 மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் எனப் பல லட்சம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் இப்போது மாபெரும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய காட்டுத்தீயாக இது இருக்கிறது. இந்தக் காட்டுத் தீயால் பல லட்சம் பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 10 கோடி மக்கள் இந்தக் காட்டுத் தீயால் கடுமையான உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
காட்டுத் தீ: கனடா வரலாற்றில் இதுபோன்ற மிக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டதே இல்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.. கனடா நாட்டின் தரவுகளின்படி, 3.8 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேலான காடுகள் இந்த தீயில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான காட்டுத்தீயால் ஏற்கனவே 20 ஆயிரம் மக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவின் கியூபெக் என்ற பகுதியில் 150 காட்டுத் தீ இப்போது எரிந்து கொண்டிருக்கிறது. அங்கே இந்தளவுக்கு மோசமான காட்டுத் தீ ஏற்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் காட்டுத்தீயால் அங்கே சுற்றிலும் கரும் புகை எழுந்துள்ளது. இந்த புகை பல நூறு கிமீவுக்கும் பரவியுள்ளது.
இதனால் விமானச் சேவையும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடா மட்டுமின்றி அமெரிக்காவும் இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த புகையால் இதுவரை சுமார் 2500 விமானங்கள் தாமதமாகியுள்ளது இதனால் அங்கே பயணத்தைத் திட்டமிட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா: இந்த காட்டுத் தீயின் அமெரிக்க நகரான நியூயார்க் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரைச் சுற்றிலும் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கேயும் பல விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும், அங்கு நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளும் கூட தள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தளவுக்கு அங்கே பாதிப்பு மோசமாக இருந்தது.
இதனால் நியூயார்க் மக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள மக்களுக்கு இலவச மாஸ்க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறினால் மாஸ்க் அணிந்தே வருமாறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு மோசம்: இந்த புகை மூட்டம் நியூயார்க்கைத் தாண்டி மற்ற கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அபாயகரமான புகைமூட்டம் இந்த வாரம் முழுக்க நீடிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். நியூயார்க்கில் உள்ள பல முக்கிய இடங்களும் கூட புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளது. நியூயார்க் மட்டுமின்றி, ஃபிலடெல்பியா மற்றும் பென்சில்வேனியா என பல பகுதிகளிலும் காற்றின் தரம் அபாயகரமானதாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் காற்றின் தரம் மிக மிக மோசமாகவே இருக்கிறது. கனடா மோசமான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார். அதன்படி காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயில் இருந்து வரும் புகை நமக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "காட்டுத் தீயின் புகையால் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். மேலும், நீண்ட காலமாகப் பார்த்தால் கேன்சர் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து கூட இருக்கிறது. புகையில் இருக்கும் சின்ன சின்ன துகள்களே இதற்குக் காரணம்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications