தனியாக துண்டிக்கப்பட்ட தலை.. மீண்டும் முதுகெலும்புடன் இணைத்த மருத்துவர்கள்! மருத்துவத்தின் உச்சம்
இல்லினாஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது தலையையும் முதுகு எலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்து போனது. இதனால் அவரது உயிரே போகும் ஆபத்து இருந்தது. இருப்பினும், மருத்துவர்கள் தீவிரமாக முயன்று அவரை காப்பாற்றியுள்ளனர். இப்போது சில பிரச்சினைகள் இருந்தாலும் அவர் நார்மலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மருத்துவத் துறை இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள் பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்கிறார்கள். இதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. அப்படி மிகச் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட தலை
அமெரிக்காவின் இல்லினாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு விளையாடிக் கொண்டு இருக்கும்போது பயங்கரமான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த சில சம்பவங்களால் அவருக்கு உடலின் உட்புறம் தலை துண்டிக்கப்பட்டது. அதாவது அவரது தலையையும் முதுகு எலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்து போனது. பொதுவாக இதுபோல நடந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும். ஆனால், மருத்துவர் அவரது தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.
என்ன நடந்தது
மேகன் கிங் என்ற அந்த பெண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது நண்பர்களுடன் இணைந்து கால்பந்து வீசி விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு சமயம் எகிறிப் பறந்த கால்பந்தை மேகன் கிங் குதித்துப் பிடிக்க முயன்றார். இருப்பினும், நிலைதடுமாறி அந்த பெண் மிக மோசமாக விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கணுக்கால் தேசம் அடைந்தது. மேலும், இரண்டு தோள்பட்டை தசைகளும் கிழிந்தது. இந்த விபத்து கடந்த 2005ம் ஆண்டு நடந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மூட்டுகள் பலவீனமடைந்து தசைகள் கிழிக்கத் தொடங்கின. ஏன் அவருக்கு இதுபோல ஆகிறது என்றே மருத்துவர்களுக்கு முதலில் புரியவில்லை.
துண்டிக்கப்பட்ட தலை
விபத்து நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவர்கள் அவருக்கு ஹைப்பர்மொபைல் எஹ்லர்ஸ்-டான்லோஸ் (hEDS) என்ற நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இது ஒரு மரபணுக் கோளாறு ஆகும். இந்த கோளாறு காரணமாக ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கழுத்து எலும்பு டிஸ்லோகெட் ஆனது. அதாவது மருத்துவர்கள் அவரது கழுத்தில் இருந்து ஒரு மருத்துவ பிரேஸை அகற்ற முயன்றபோது, அவரது மண்டை ஓடு அவரது முதுகெலும்பிலிருந்து பிரிந்துவிட்டது. அதாவது உட்புறம் அவரது மண்டை ஓட்டின் எலும்பு உடலின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது.
ஆங்கிலத்தில் இதை internal decapitation என்பார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இதுபோல நடந்துவிட்டால் மூளை உடலின் மற்ற பாகங்களுடன் தொடர்பு கொள்வது கட் ஆகும். நிலைமை மோசமானதால் ஒரு கட்டத்தில் மேகனின் நரம்பியல் மருத்துவர் அவரது தலையைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. இல்லை என்றால் நரம்புகளும் ரத்த நானங்களும் கட் ஆகிவிடும் என்ற சூழல் இருந்தது.
அறுவை சிகிச்சை
இதையடுத்து அவர் அவசரமாக எமர்ஜென்சி அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மண்டை ஓட்டை அவளது முதுகெலும்புடன் இணைக்க ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. பேக் டூ பேக் சுமார் 37 அறுவை சிகிச்சைகள் நடந்த நிலையில், அதன் பிறகே மேகனின் மண்டை நிரந்தரமாக அவளது முதுகெலும்புடன் இணைக்கப்பட்டது. இப்போது அவரால் தலையை மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் நகர்த்த முடியாது. உடம்புடன் சேர்ந்தே திருப்ப முடியும்.
இருந்தபோதிலும் பெரும்பாலானோருக்கு இதுபோல பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். ஆனால், மேகன் உயிர் பிழைத்தார். இப்போதும் தனது வேலையைச் செய்து வருகிறார். தனக்கு நேர்ந்த கதையை மற்றவர்களுக்குச் சொல்லி ஊக்கமளித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications