விபத்தில் சிக்கிய இளைஞரைக் காப்பாற்றிய "மருத்துவ தேவதை"
பாங்காங்: தாய்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவரின் உயிரை அவ்வழியாக சாலையில் சென்ற பெண் மருத்துவர் காப்பாற்றினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களின் பாராட்டுக்களை வாங்கியுள்ளது.
பெண் டாக்டரை அனைவரும் உண்மையான தேவதை என்று அனைவரும் பாராட்டியுள்ளனர்.
தாய்லாந்து பெண் மருத்துவர் மித்ரா:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ விரிவுரையாளர் மித்ராகுல்.சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு காரில் சென்றார்.
சாலை விபத்தில் சிக்கிய வாலிபர்:
காரில் சென்றபோது சாலையின் ஓரத்தில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை பார்த்தார்.
ஓடிவந்து முதலுதவி:
மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், லாரியின் மீது பலமாக மோதியுள்ளார். இதில் அவரது தொண்டை மற்றும் பிறப்பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இரத்தம் அதிகமான அளவு வெளியேறியது. வாலிபரை பார்த்ததும், காரை நிறுத்தி வேகமாக ஓடிவந்து முதல் உதவி செய்தார்.
ஆம்புலன்ஸுக்கு அழைப்பு:
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தார். இரத்த வெள்ளம், சிதறிய கண்ணாடி துண்டுகளுக்கு இடையே கிடந்த வாலிபரை மீட்டு, அவரது காயங்களை தனது மேல் கோட்டை பயன்படுத்தி டாக்டர் மித்ராகுல் மறைத்தார்.
உடன் இருந்த மருத்துவர்:
வாலிபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வரையில் டாக்டர் மித்ராகுல் உடன் இருந்தார். மருத்துவமனையில் அவசரசிகிச்சை முடிந்த பின்னரே அவர் அங்கிருந்து திரும்பி சென்றார்.
குவியும் பாராட்டுகள்:
பெண் மருத்துவரின் இந்த மனிதாபிமானமிக்க செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
உண்மையான தேவதை:
பெண் டாக்டரை அனைவரும் உண்மையான தேவதை என்று டுவிட்டரில் பாராட்டியுள்ளனர்.
காப்பாற்றுவதில் மகிழ்ச்சி:
இதுதொடர்பாக பெண் மருத்துவர் கூறுகையில், "விபத்து நடந்ததும் நான் பார்த்தேன், ஆதலால் அவரை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவரை காப்பாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிர்ஷ்டவசமாக உதவி:
நான் எதனை செய்ய வேண்டுமோ, அதனைதான் செய்தேன். அவருக்கு உதவியே தேவை, அதிர்ஷ்டவசமாக அவருக்காக நான் அங்கு இருந்தேன்"என்று கூறியுள்ளார்.
டாக்டர் மித்ராகுல் எப்போதும், மருத்துவ உதவிக்காக போராடும் அனைவருக்கும் உதவி செய்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.