உலக அழகி என்னவோ ரோலன் ஸ்டார்ஸ்தான்.. ஆனால் வெற்றிகரமானஅழகி 'ஐஸ்' தானாம்!
லண்டன்: 121 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற உலக அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ரோலேன் ஸ்டார்ஸ் உலக அழகி மகுடத்தை தட்டிச் சென்றார்.
உலக அழகி போட்டி லண்டனில் நடந்தது. இதில் பங்கேற்க 121 நாடுகளில் இருந்து அழகிகள் சென்றிருந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்றிரவு அழகி போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் 22 வயதான தென் ஆப்பிரிக்காவின் ரோலேன் ஸ்டார்ஸ் உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இவர் தென் ஆப்பிரிக்க அழகியாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவராகும்.
பட்டத்தை வென்ற ஸ்டார்ஸ் "தென் ஆப்பிரிக்காவே இது உங்களுக்குத்தான்" என்று தனது நாட்டினரை பார்த்து கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலக அழகிகளிலேயே தொடர்ந்து மதிப்பு மிக்க ஒருவராக விளங்குபவர் ஐஸ்வர்யாராய்தான் என்பதால் அவருக்கு, 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற தலைப்பில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். தாய் விருந்தாவும் உடனிருந்தார். ஐஸ்வர்யா ராய் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தததுடன், இதன் காரணமாக பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். விளம்பர படங்களிலும் பிசியாக உள்ளார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.