நாகாலாந்தில் தம்பதி சுட்டுக் கொலை: கார்கள், வீடுகளை எரித்த கும்பல்
கோஹிமா: நாகாலாந்தில் ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டுக் காரில் கிடந்ததை பார்த்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது.
நாகாலாந்து மாநிலம் ட்யூன்சாங் மாவட்டத்தில் உள்ள ஷமடார் கிராமத்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர் நாரோ. அவரது கணவர் அலெம்பா. கிபைர் மாவட்டத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அலெம்பா மற்றும் நாரோ கார் ஒன்றில் ஷமடாரில் இருந்து கிபைருக்கு சென்றனர். அப்போது ஷமடாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் செல்கையில் அவர்கள் காரை நோக்கி யாரோ துப்பாக்கிகளால் சுட்டதில் இருவரும் பலியாகினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கிபைரில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அந்த தம்பதி கொல்லப்பட்டதை கண்டித்து அந்த கும்பல் 5 வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன் 3 வீடுகளையும் எரித்தது. மேலும் பல வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்தியது.
இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படியும் அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் ராணுவத்தினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications